கோடைக்காலத்தில் ஏற்படும் நோய்கள்
கோடைக்காலத்தில் உடலில் சில நோய்கள் ஏற்படுவது உண்டு. அவை வராமல் தற்காத்துக் கொள்வது எப்படி?
பூஞ்சைத் தொற்று நோய்
உடலில், ஈரமுள்ள பகுதிகளில் பூஞ்சைக் கிருமிகள் எளிதில் தொற்றிக்கொள்ளும். குறிப்பாக, வியர்க்குருவில் இத்தொற்றும் சேர்ந்து கொண்டால் அரிப்புடன் கூடிய படை, தேமல் தோன்றும்.
தடுக்கும் வழிமுறைகள்
உள்ளாடைகளைச் சுத்தமாக வைத்துக்கொண்டால் பூஞ்சை படை வருவது தடுக்கப்படும். இந்த நோய் வந்துவிட்டால், படையைக் குணப்படுத்தும் களிம்பு அல்லது பவுடரைத் தடவி நோய் நீக்க வேண்டும்.
நீர்க்கடுப்பு நோய்
கோடையில் சிறுநீர்க் கடுப்பு அதிகத் தொல்லை தரும். அளவுக்கு மீறி வியர்வை வெளியேறுதல் மற்றும் தேவையான அளவு தண்ணீர் குடிக்காதது இதற்கு முக்கியக் காரணம் ஆகும்.
தடுக்கும் வழிமுறைகள்
உட்கொள்ளும் தண்ணீரின் அளவு குறையும்போது சிறுநீரின் அளவும் குறைந்துவிடும். இதனால், சிறுநீரின் மூலம் வெளியேற வேண்டிய உப்புகள் கடினமாகி, சிறுநீர்ப் பாதையில் படிகங்களாகப் படிந்துவிடும். இதன் விளைவுதான் நீர்க்கடுப்பு.நிறையத் தண்ணீர் குடித்தால் இந்தப் பிரச்சினை சரியாகிவிடும்.
வேனல் கட்டி
தோலின் மூலம் வெளியேற வேண்டிய உப்பு, யூரியா போன்றவை சரியாக வெளியேற முடியாமல் வியர்க்குருவில் அழுக்குபோல் தங்கிவிடும். அப்போது அங்கு பாக்டீரியா தொற்றி அந்த இடம் வீங்கிப் புண்ணாகிவிடும். இதன் பெயரே வேனல் கட்டி ஆகும்.
தடுக்கும் வழிமுறைகள்
இந்த நோயைத் தடுக்க ஆண்டிபயாடிக் மருந்துகள், வலி நிவாரணிகள், வெளிப்பூச்சுக் களிம்புகள் ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டும். வெயிலில் அலைவதைத் தவிர்க்க வேண்டும்.
வெப்பத் தளர்ச்சி
வெயிலின் ஆதிக்கம் அதிகரிக்கும்போது, உடலின் வெப்பம் 106 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் தாண்டிவிடும். அப்போது உடல் தளர்ச்சி அடையும். களைப்பு உண்டாகும். தண்ணீர்த் தாகம் அதிகமாக இருக்கும். தலைவலி, வாந்தி, தலைச்சுற்றல், மயக்கம் போன்ற அறிகுறிகள் தோன்றும். அளவுக்கு மீறிய வெப்பத்தின் காரணமாக உடலின் உப்புகள் வெளியேறிவிடுவதால் இந்தத் தளர்ச்சி ஏற்படுகிறது.
தடுக்கும் வழிமுறைகள்
வெப்பதளர்ச்சியை தடுக்க உடனடியாக முதலுதவி தர வேண்டியது முக்கியம். குளிர்ச்சியான இடத்திற்கு அப்புறப்படுத்த வேண்டும்.
வெப்ப மயக்கம்
வெயிலின் உக்கிரத்தினால் தோலிலுள்ள இரத்தக்குழாய்கள் மிக அதிகமாக விரிவடைந்து, இடுப்புக்குக் கீழ் இரத்தம் தேங்குவதற்கு வழி வகுக்கிறது. இதனால், இதயத்துக்கு இரத்தம் வருவது குறைந்து, இரத்த அழுத்தம் கீழிறங்குகிறது. மூளைக்குப் போதுமான இரத்தம் கிடைப்பதில்லை. இவற்றின் விளைவாக மயக்கம் வருகிறது.
தடுக்கும் வழிமுறைகள்
வெப்பமயக்கம் ஏற்பட்டவரை குளிர்ச்சியான இடத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும். மின்விசிறிக்குக் கீழே படுக்க வைத்து, ஆடைகளைத் தளர்த்தி, காற்று உடல் முழுவதும் படும்படி செய்யலாம். தலைக்குத் தலையணை வேண்டாம். பாதங்களை உயரமாகத் தூக்கி வைக்க வேண்டும். தண்ணீரில் நனைத்த துணியால் உடல் முழுவதும் ஒற்றியெடுத்துத் துடைக்க வேண்டும். இது மட்டும் போதாது. அவருக்குக் குளுக்கோஸ் சேர்ந்த நீராகாரங்களைக் கொடுக்க வேண்டும். உடனடியாக அவரை மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்.
வியர்க்குரு
உடலைச் சுத்தமாகப் பராமரிக்காவிட்டால், தோலில் உள்ள வியர்வைச் சுரப்பிகளில் அழுக்கு சேர்ந்து அடைத்துக்கொள்ளும். இதனால், வியர்க்குரு வரும்.
தடுக்கும் வழிமுறைகள்
இந்த நோயைத் தடுக்க வெயில் காலத்தில் தினமும் இரு வேளை குளித்தால் வியர்க்குரு வராது. வியர்க்குருவில் காலமின் லோ‘னைப் பூசினால் அரிப்பு குறையும்.
தேமல் தொற்று
உடலில் வியர்வை தேங்கும் பகுதிகளான மார்பு, முதுகு, அக்குள்களில் பூஞ்சைக் கிருமிகள் எளிதில் தொற்றிக்கொள்ளும்.
தடுக்கும் வழிமுறைகள்
தேமலைக் குணப்படுத்தும் வெளிப்பூச்சுக் களிம்பு அல்லது பவுடரை தடவி வந்தால் குணமாகும். இதன் தாக்குதல் அதிகமாக இருந்தால் பூஞ்சை எதிர்ப்பு மாத்திரைகள் பயன்படுத்தலாம்.
படர்தாமரை
சரும மடிப்புகளிலும், உடல் மறைவிடங்களிலும் காற்றுப் புகாத உடல் பகுதிகளிலும் அக்குள், தொடையிடுக்கு போன்ற உராய்வுள்ள பகுதிகளிலும் டிரைக்கோபைட்டன், எபிடெர்மோபைட்டன் போன்ற காளான் கிருமிகள் தாக்கி, ‘படர்தாமரை’ எனும் சரும நோய் வரும். இரவு நேரத்தில் அரிப்பும் எரிச்சலும் அதிகத் தொல்லையைக் கொடுக்கும். கோடை வெப்பத்தால் உண்டாகும் வியர்வை, இந்தத் தொல்லைகளை அதிகப்படுத்தும்.
தடுக்கும் வழிமுறைகள்
உள்ளாடைகளை தினமும் துவைத்துச் சுத்தமாகப் பயன்படுத்த வேண்டும். முக்கியமாக, குளித்து முடித்த பிறகு மீண்டும் பழைய ஆடைகளை உடுத்தக் கூடாது. மென்மையான பருத்தி ஆடைகளை அணிவது நல்லது. இறுக்கமான ஆடைகளை அணிய கூடாது.
சரும எரிச்சல்
அக்னி நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும்போது 42 டிகிரி சென்டிகிரேடுக்கு மேல் வெயில் கொளுத்தும். அப்போது புற ஊதாக்கதிர்களின் உக்கிரத்தைத் தாங்க முடியாமல், சருமமும் அதைச் சார்ந்த ரத்தக்குழாய்களும் விரிந்து சிவந்துவிடும். இதன் விளைவால் சருமத்தில் எரிச்சலும் வலியும் ஏற்படும்.
தடுக்கும் வழிமுறைகள்
சன்ஸ்கிரீன் லோசனைத் தடவி, அரை மணி நேரம் கழித்துச் வெளியே செல்லுதல் வேண்டும். பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். கோடையில் வெள்ளைநிற ஆடைகளை அணிவதே நல்லது.
சூரிய ஒளி ஒவ்வாமை
ஒரு சிலருக்குச் சூரிய ஒளியே ஒவ்வாமையை உண்டாக்கும். இவர்கள் வெயிலுக்குச் சென்றுவிட்டால் போதும், உடலெங்கும் அரிக்கத் தொடங்கிவிடும். சருமம் சிவந்து வட்ட வட்டமாகத் தடிப்புகள் தோன்றும். அவற்றில் நீர் கோர்த்துக்கொள்ளும். இதைத் தொடர்ந்து சருமம் உரியும்.
தடுக்கும் வழிமுறைகள்
உடல் முழுவதையும் மறைக்கின்ற வகையில் ஆடை அணிய வேண்டும். இந்தப் பிரச்னைக்குத் தகுந்த மருத்துவச் சிகிச்சையைப் பெற வேண்டியதும் முக்கியம்.
மணல்வாரி அம்மை
மீசில்ஸ் எனும் வைரஸ் கிருமிகளால் இது வருகிறது. இந்தக் கிருமிகள் கோடை காலத்தில் அதிக வீரியத்துடன் செயலாற்றும். முதலில் காய்ச்சல், வறட்டு இருமலில் தொடங்கும். மூக்கில் நீர் வடியும். தொடர்ந்து குழந்தையின் முகமும் கண்களும் சிவந்துவிடும். முகம், மார்பு, வயிறு, முதுகு, தொடை ஆகிய பகுதிகளில் மணலை அள்ளித் தெளித்ததுபோல் இளஞ்சிவப்பு நிறத்தில் சின்னச் சின்ன தடிப்புகள் தோன்றும்.
தடுக்கும் வழிமுறைகள்
இந்தக் குழந்தைகளுக்கு அரிசிக் கஞ்சி, வெல்லத்தில் தயாரித்த ஜவ்வரிசிக் கஞ்சி, பால், மோர், தண்ணீர், இளநீர், பழச்சாறுகள் உள்ளிட்ட நீராகாரங்களை நிறையத் தர வேண்டும்.
சின்னம்மை
இது வேரிசெல்லா ஜாஸ்டர் எனும் வைரஸ் கிருமியால் வருகிறது. மாசடைந்த காற்று வழியாக ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு தொற்றிக் கொள்ளும் தன்மையுடையது. முதலில் கடுமையான காய்ச்சலும், உடல்வலியும் ஏற்படும். உடல் முழுவதும் அரிக்கும், அதன் பிறகு நீர் கோர்த்த கொப்புளங்கள் தோன்றும்.
தடுக்கும் வழிமுறைகள்
நோயாளியைத் தனியாக வைத்திருந்தால் மற்றவர்களுக்கு இது பரவுவதைத் தடுக்கலாம். இதன் வீரியத்தைக் குறைக்க வைரஸ் எதிர்ப்பு மருந்துகள் உள்ளன. வீட்டில் ஒருவருக்கு அம்மை வந்துவிட்டால், மற்றவர்கள் உடனே தடுப்பூசியைப் போட்டுக்கொள்வது நல்லது. நல்ல ஊட்டச்சத்துள்ள உணவு வகைகளையும், ஆவியில் வேகவைத்த உணவு வகைகளையும், நீர்ச்சத்து மிக்க பழங்களையும் அடிக்கடி தர வேண்டும்.
தட்டம்மை
குழந்தைகளை பெரிதும் தாக்கும் இந்நோய் வைரஸ் கிருமியால் ஏற்படுகிறது. தட்டம்மை விரைவாகப் பரவும் ஒரு சுவாச நோய்த்தொற்று. காய்ச்சல், இருமல், நீர் நிறைந்த சிவந்த கண்கள் மற்றும் ஜலதோசம் போன்றவையும் ஏற்படும். நீலம்-வெள்ளை நிற மையப் பகுதி கொண்ட சிறிய சிவப்பு நிற புள்ளிகள் போன்ற தோற்றம் வாயினுள் ஏற்படும். உடல் முழுவதும் தோலில் வியர்க்குரு போன்று பரவும். கண்களிலும் இது காணப்படும். கண்கள் உறுத்தும். கண் எரிச்சல், உடல் எரிச்சல் உண்டாகும்.
தடுக்கும் வழிமுறைகள்
நோயாளியைத் தனியாக வைத்திருந்தால் மற்றவர்களுக்கு இது பரவுவதைத் தடுக்கலாம். நல்ல ஊட்டச்சத்துள்ள உணவு வகைகளையும், ஆவியில் வேகவைத்த உணவு வகைகளையும், நீர்ச்சத்து மிக்க பழங்களையும் அடிக்கடி தர வேண்டும்.
புட்டாளம்மை
குழந்தைகளுக்கு ஏற்படும் அம்மைகளில் இதுவும் ஒன்றாகும். உமிழ்நீர் சுரப்பிகளில் ஒன்றாகிய பேரோடிட் சுரப்பியில் ஏற்படுகிற நோயாகும். காதின் கீழ்ப் பகுதியில் வீக்கம் ஏற்படும். வாயைத் திறக்க முடியாமல் வலி இருக்கும். உணவு, தண்ணீர் உட்கொள்ளும்போது வலி இருக்கும். இந்த நோய்க்கு ‘பொன்னுக்கு வீங்கி’ என்ற வேறு பெயரும் வழக்கில் உண்டு.
தடுக்கும் வழிமுறைகள்
வேப்பங் கொழுந்தையும், மஞ்சளையும் சரிசமமாக எடுத்து அரைத்து பூசினால் சிறந்தப் பலனைத் தரும்.
உமியம்மை
குழந்தைகளை பெரும்பாலும் தாக்கும் இந்த அம்மை நோய் ‘ரூபெல்லா’ என்ற வைரஸ் கிருமியால் ஏற்படுகிறது. வாந்தியும் பேதியும் சில நேரங்களில் உண்டாகும். மூன்றாம் நாள் முகத்தில் சிறு நமைச்சல் இருக்கும். பிறகு உடலெங்கும் உமியைப் போல் கொப்புளங்கள் வர ஆரம்பிக்கும். ஐந்தாம் நாள் நீர்க்கோர்த்த கொப்புளங்களாக மாறும். பின் சிறிது சிறிதாக ஒன்பதாவது நாளில் மறைந்துவிடும்.
- ராஜேஸ்வரி மணிகண்டன், தேனி.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.