* பருப்பில் சிறிதளவு நெய் விட்டு வேக வைத்தால், விரைவாக வேகும். அதோடு சுவையும் மணமும் அதிகரிக்கும்.
* தேங்காய்த் துருவலுடன், ஊற வைத்து அரைத்த வேர்க்கடலையைச் சேர்த்து, தேங்காய் பர்பி செய்தால், வித்தியாசமான சுவையுடன் இருக்கும்.
* உருளைக்கிழங்கைச் சீவியதும் சிறிதளவு பயத்தம்பருப்பு மாவைத் தூவி, சிப்ஸ் செய்தால் மொறுமொறுவென்று இருக்கும்.
* தோசை மாவில் வெந்தயப் பொடி சிறிதளவு சேர்த்து, தோசை வார்த்தால் வாசனையாக இருக்கும்.
* தயிர் வடை செய்யும் போது வடையை பொரித்ததும், அதைச் சில நிமிடங்கள் தண்ணீரில் நனைத்து பின் தயிரில் போட்டால் நன்றாக ஊறும்.
* ஜவ்வரிசி பாயசம் செய்யும் போது, இரண்டு தேக்கரண்டி வறுத்த கோதுமை மாவைப் பாலில் கரைத்து ஊற்றிச் செய்தால், பாயசம் கெட்டியாகவும் ருசியாகவும் இருக்கும்.
* இட்லிக்கான அரிசியை வெந்நீரில் ஊற வைத்து அரைத்தால், இட்லி மிருதுவாக இருக்கும்.
* தோசை மாவு அரைக்கும் போது சிறிதளவு கடலைப் பருப்பைச் சேர்த்து அரைத்தால், தோசை பொன்னிறமாக வரும்.
* மோர்க் குழம்பு செய்து அடுப்பிலிருந்து இறக்கும் வேளையில், சிறிது தேங்காய் எண்ணெய் ஊற்றி இறக்கினால் வாசனையாக இருக்கும்.
* முள்ளங்கிச் சாம்பார் செய்யும் போது, சிறிதளவு எண்ணெயில் முள்ளங்கியை வதக்கிய பின் சாம்பார் செய்தால் ருசி கூடும்.
* கட்லெட் செய்ய ரொட்டித்தூள் இல்லையென்றால், அரிசியை பொரித்துத் தூளாக்கிப் பயன்படுத்தலாம்.
* வெங்காய பஜ்ஜிக்கான வெங்காயத்தை, தோலை உரிக்காமல் வட்டமாக வெட்டி விட்டு பின் தோலை உரித்தால், வெங்காயம் தனித்தனியாக பிரியாமல் வட்டமாக இருக்கும்.
* உளுந்த வடைக்கு அரைக்கும் போது, சிறிது பச்சரிசியையும் சேர்த்து அரைத்தால், வடை மொறுமொறுவென்று இருக்கும்.
* இட்லிப் பொடி தயாரிக்கும் போது, சிறிதளவு கருவேப்பிலையை வறுத்துச் சேர்த்து அரைத்தால் ருசியாக இருக்கும்.
* மிளகாயை வறுத்துப் பொடி செய்யும் போது, சிறிது நல்லெண்ணெய் ஊற்றி வறுத்தால், அவை கமறாமல் இருப்பதோடு, பொடியும் மணமாக இருக்கும்.
* தோசை மாவுடன், சிறிதளவு சோளமாவு சேர்த்து தோசை வார்த்தால், தோசையின் சுவை விரும்பக் கூடியதாக இருக்கும்.
* வற்றல் குழம்பு தாளிக்க நல்லெண்ணெய் பயன்படுத்தினால், வாசனை நன்றாக இருக்கும்.