ஜிஞ்சர் சில்லி சிக்கன்
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. கோழிக்கறி – 1/2 கிலோ
2. வெங்காயம் – 1 எண்ணம்
3. சோயாசாஸ் – 1/2 கப்
4. வினிகர் – 1/4 கப்
5. மிளகுத் தூள் – 1 தேக்கரண்டி
6. மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி
7. அஜினோமோட்டோ – 1/4 தேக்கரண்டி
8. நல்லெண்ணெய் – 2 தேக்கரண்டி
9. கார்ன் ஃப்ளவர் – 2 மேசைக்கரண்டி
10. மைதா மாவு – ஒரு மேசைக்கரண்டி
11. இஞ்சி – 1 துண்டு
12. பச்சைமிளகாய் – 3 எண்ணம்
13. உப்பு – தேவையான அளவு
14. எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
1. கோழியை எலும்புடன் சிறு உருண்டைத் துண்டுகளாக நறுக்கிச் சுத்தம் செய்து வைக்கவும்.
2. வெங்காயத்தை மிக்ஸியில் விழுதாக அரைத்து வைக்கவும்.
3. இஞ்சி மற்றும் பச்சைமிளகாயை மிகச் சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
4. ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த கோழித் துண்டுகளைப் போட்டு, அதில் அரைத்து வைத்துள்ள வெங்காயம், மிளகுத் தூள், மஞ்சள் தூள், சோயா சாஸ், வினிகர், அஜினோமோட்டோ, நல்லெண்ணெய் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
5. கோழித் துண்டுகள் ஊறியதும் எல்லாவற்றையும் குக்கருக்கு மாற்றி அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி ஒரு விசில் விட்டு அரை வேக்காடு வேக வைத்துக் குக்கரை இறக்கவும்.
6. ஒரு கிண்ணத்தில் கார்ன் ஃப்ளார், மைதாமாவு இவற்றை ஒன்றாகப் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி கட்டிகளில்லாமல் கரைத்து வைக்கவும்.
7. வாணலியில் பொரிக்கத் தேவையான அளவு எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் குக்கரில் இருந்து கோழித் துண்டுகளை மட்டும் எடுத்து கரைத்து வைத்திருக்கும் மாவில் தோய்த்து, எண்ணெயில் இரண்டிரண்டாகப் போட்டு பொரித்து எடுக்கவும்.
8. வாணலியில் 2 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் பொடியாக நறுக்கிய இஞ்சி மற்றும் பச்சை மிளகாயைப் போட்டுச் சிவக்க வறுக்கவும்.
9. அதில் பொரித்தெடுத்த கோழித் துண்டுகளைப் போட்டுப் பிரட்டி விட்டு, குக்கரில் உள்ள கிரேவியும் ஊற்றி எண்ணெய் தெளிந்து வரும் போது இறக்கவும்.
குறிப்பு: பரோட்டா, சப்பாத்தி இவற்றுடன் சேர்த்துச் சாப்பிடச் சுவையாக இருக்கும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.