சிக்கன் மஞ்சூரியன்
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. எலும்பு நீக்கிய கோழிக்கறி - 500 கிராம்
2. முட்டை - 1 எண்ணம்
3. கார்ன் ப்ளவர் - 6 மேசைக்கரண்டி
4. மைதா - 1 மேசைக்கரண்டி
5. சோயா சாஸ் - 2 மேசைக்கரண்டி
6. இஞ்சி விழுது - 2 தேக்கரண்டி
7. பொடியாக நறுக்கிய பூண்டு – 2 தேக்கரண்டி
8. குடை மிளகாய் - 1 எண்ணம்
9. பெரிய வெங்காயம் - 1 எண்ணம்
10. பச்சை மிளகாய் - 3 எண்ணம்
11. வெங்காயத்தாள் - சிறிதளவு
12. நல்லெண்ணெய் - 4 மேசைக்கரண்டி
13. அஜினோமோட்டோ - 1/4 தேக்கரண்டி
14. வினிகர் - 2 மேசைக்கரண்டி
15. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. கோழிக்கறியைக் கழுவிச் சுத்தம் செய்து நீளத் துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
2. பச்சை மிளகாய், வெங்காயத்தை நறுக்கி வைக்கவும்.
3. குடை மிளகாயைக் கழுவி, விதைகளை நீக்கி மெல்லிய நீளத் துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
4. வெங்காயத் தாளை நீளவாக்கில் குறுக்காக வெட்டி வைக்கவும்.
5. ஒரு அகலமான பாத்திரத்தில் 5 மேசைக்கரண்டி கார்ன்ப்ளவர், ஒரு மேசைக்கரண்டி மைதா, சோயா சாஸ், முட்டை, தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாகக் கலந்து சிக்கனைச் சேர்ந்து மறுபடியும் நன்கு கலந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
6. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் ஊறவைத்துள்ள கோழித் துண்டங்களைப் போட்டுப் பாதியளவு வேகும்படி பொரித்து எடுத்துத் தனியாக வைத்துக் கொள்ளவும்.
7. மீதமுள்ள கார்ன் ப்ளவரை முக்கால் கப் தண்ணீரில் கரைத்து வைக்கவும்.
8. ஒரு வாணலியில் 4 மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு நறுக்கிய பூண்டு, இஞ்சி விழுது சேர்த்து இலேசாக வதக்கிய பின், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து மேலும் ஒரு நிமிடம் வதக்கவும்.
9. அதன் பிறகு சோயா சாஸ், அஜினோமோட்டோ, தேவையான உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.
10. பிறகு கரைத்து வைத்துள்ள கார்ன்ப்ளவர் கலவையை ஊற்றிக் குழம்பு கெட்டியாகும் வரை நன்கு கிளறி விடவும்.
11. அதில் வறுத்து வைத்துள்ள கோழித் துண்டங்களைச் சேர்த்துச் சில நிமிடங்களுக்கு வேக விடவும்.
12. பின்னர் நறுக்கிய குடை மிளகாய் சேர்த்து அடுப்பை குறைத்து வைக்கவும்.
13. இறக்குவதற்கு முன்பு வினிகர் கலந்து, வெங்காயத் தாளினைத் தூவி சூடாகப் பரிமாறலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.