ஆந்திரா சிக்கன் வறுவல்
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. கோழிக்கறி - 1 கிலோ
2. பெரிய வெங்காயம் - 4 எண்ணம்
3. பச்சை மிளகாய் - 3 எண்ணம்
4. கறிவேப்பிலை - சிறிது
5. இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
6. மிளகாய்த்தூள் - 4 தேக்கரண்டி
7. மஞ்சள் தூள் - ½ தேக்கரண்டி
8. உப்பு - தேவையான அளவு
9. எண்ணெய் - தேவையான அளவு
மசாலாப் பொடி தயாரிக்க:
10. மல்லி (தனியா) - 1½ தேக்கரண்டி
11. சீரகம் - 1 தேக்கரண்டி
12. சோம்பு -1 தேக்கரண்டி
13. மிளகு - 1 தேக்கரண்டி
14. ஏலக்காய் - 3 எண்ணம்
15. கிராம்பு - 4 எண்ணம்
16. பட்டை - சிறிய துண்டு
17. மிளகாய் வற்றல் - 6 எண்ணம்
18. காஷ்மீரி மிளகாய் வற்றல் - 4 எண்ணம்
செய்முறை:
1. வாணலியில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், தனியா, சீரகம், சோம்பு, மிளகு, மிளகாய் வற்றல், காஷ்மீரி மிளகாய் ஆகியவற்றைப் போட்டு, எண்ணெய் ஊற்றாமல் இரண்டு நிமிடம் மிதமான தீயில் வறுத்தெடுக்கவும்.
2. பின்னர் அதை ஆற வைத்துப் பொடியாக அரைத்துக் கொள்ளவும்.
3. கோழிக்கறியை மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், சிறிதளவு உப்பு கலந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
4. பெரிய வெங்காயத்தைப் பொடிதாக நறுக்கிக் கொள்ளவும்.
5. வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக மாறும் வரை வதக்கவும்.
6. பின்பு பச்சை மிளகாயை இரண்டாக வெட்டி அதில் சேர்த்துக் கிளறவும். அதன் பின்னர் இஞ்சி, பூண்டு விழுது போட்டு, பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
7. பின்பு அதில் கறிவேப்பிலை சேர்க்கவும்.
8. சிறிது நேரம் கழித்து அந்தக் கலவையில் ஊற வைத்த கோழிக்கறியை சேர்த்து வதக்கவும்.
9. பின்னர் அதனுடன் அரைத்து வைத்துள்ள மசாலாப் பொடி இரண்டு தேக்கரண்டி சேர்த்துக் கலக்கவும்.
10. கலவையில் தண்ணீர் சேர்க்கத் தேவையில்லை, கோழிக்கறியை உப்பு போட்டு ஊற வைத்திருப்பதால், சிறிது சுவைத்துப் பார்த்து, தேவையான உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
11. அதன் பிறகு, கலவையில் இருந்து எண்ணெய் பிரிந்து மேலே வரும் பக்குவத்தில் சிறிது கறிவேப்பிலை போட்டுக் கிளறி இறக்கவும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.