முட்டை பிரியாணி
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. வேக வைத்த முட்டை - 4 எண்ணம்
2. முட்டை - 2 எண்ணம்
3. பிரியாணி அரிசி - 3 கப்
4. வெங்காயம் – 6 எண்ணம்
5. தக்காளி - 3 எண்ணம்
6. பச்சை மிளகாய் - 5 எண்ணம்
7. இஞ்சி – ஒரு துண்டு
8. பூண்டு – 6 பல்
9. தேங்காய் துருவல் – 1 /2 கப்
10. கரம் மசாலாத் தூள் – 1 தேக்கரண்டி
11. மிளகுத்தூள் – 2 தேக்கரண்டி
12. பட்டை – ஒரு துண்டு
13. ஏலக்காய் – 2 எண்ணம்
14. கிராம்பு – 2 எண்ணம்
15. நெய் – 1 /4 கப்
16. தயிர் – 2 மேசைக்கரண்டி
17. புதினா இலை – 2 மேசைக்கரண்டி
18. மல்லித் தழை (நறுக்கியது) - 1 /2 கப்
செய்முறை:
1. பிரியாணி அரிசியை 30 நிமிடம் வரை ஊற வைக்கவும்.
2. ஒரு வெங்காயம், 2 பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கி, அதனுடன் 2 முட்டையைக் கலந்து ஆம்லெட் தயாரிக்கவும்.
3. இந்த ஆம்லெட்டை நான்கைந்து துண்டுகளாக்கிக் கொள்ளவும்.
4. ஒரு பாத்திரத்தில் 5 கப் தண்ணீரை ஊற்றிச் சூடு செய்யவும். அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய் மற்றும் தேவையான உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
5. தேங்காயைத் தயிருடன் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும். தண்ணீர் தேவைப்பட்டால் சிறிது சேர்த்துக் கொள்ளலாம்.
6. இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், 1 /4 கப் மல்லித் தழை ஆகியவற்றைச் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
7. ஒரு பெரிய பாத்திரத்தில் நெய் ஊற்றி சூடு செய்யவும். நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
8. அதனுடன் அரைத்து வைத்துள்ள இஞ்சிப் பூண்டு விழுது சேர்த்துப் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
9. தக்காளி, மீதமுள்ள மல்லி இலை, புதினா இலை, மிளகுதூள் சேர்த்து வதக்கவும்.
10. அடித்து வைத்துள்ள தேங்காய் – தயிர் விழுதைச் சேர்த்து நன்கு கலக்கவும்.
11. அதனுடன் கரம் மசாலா, உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
12. பின்னர் வேக வைத்துள்ள முட்டையை மேலாகச் சில இடங்களில் லேசாகக் கீறி மசாலாவில் சேர்த்து சில நிமிடங்கள் வேக வைக்கவும்.
13. அதன் பிறகு ஆம்லெட் துண்டுகளைச் சேர்த்துக் கலக்கவும்.
14. கொதிக்க வைத்திருந்த தண்ணீர், அரிசி சேர்த்து நன்கு கலந்து மூடி போட்டு மிதமான நெருப்பில் வேக விடவும்.
15. அதனுடன் 1 தேக்கரண்டி நெய் சேர்த்து, சாதம் நன்றாக வேகும் வரை மூடி போட்டு வைத்துப் பின்னர் இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.