சாம்பார் சாதம்
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. அரிசி - 1 கப்
2. துவரம் பருப்பு - 1/2 கப்
3. புளி - சிறிய எலுமிச்சை அளவு
4. சாம்பார் பொடி - 2 தேக்கரண்டி
5. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
6. உப்பு - தேவையான அளவு
காய்கறிகள்:
7. சாம்பார் வெங்காயம் - 10 எண்ணம்
8. தக்காளி - 1 எண்ணம்
9. பச்சை மிளகாய் - 2 எண்ணம்
10. கலந்த காய்கள் (வீட்டிலுள்ளதை நறுக்கிப் பயன்படுத்தவும்) - 2 கப்
அரைக்க:
11. மிளகாய் வற்றல் - 3 எண்ணம்
12. மல்லி - 1 மேசைக்கரண்டி
13. கடலைப்பருப்பு - 1 மேசைக்கரண்டி
14. பெருங்காய்ம் - சிறிது
15. தேங்காய்த் துருவல் - 2 மேசைக்கரண்டி
தாளிக்க:
16. எண்ணை - 2 தேக்கரண்டி
17. நெய் - 2 தேக்கரண்டி
18. கடுகு - 1/2 தேக்கரண்டி
19. வெந்தயம் - 1/4 தேக்கரண்டி
20. மிளகாய் வற்றல் - 2 எண்ணம்
21. கறிவேப்பிலை - சிறிது
22. மல்லித்தழை - சிறிது
செய்முறை :
1. அரிசியையும், பருப்பையும் நன்றாகக் கழுவி விட்டு, அத்துடன் 3 முதல் 4 கப் தண்ணீரைச் சேர்த்து, குக்கரில் போட்டு 5 முதல் 6 விசில் வரும் வரை வேக வைத்தெடுக்கவும்.
2. ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு, அதில் காய்ந்த மிளகாய், தனியா, பெருங்காயம், கடலைப்பருப்பு, தேங்காய்த்துருவல் ஆகியவற்றை ஒவ்வொன்றாகப் போட்டு சிவக்க வறுத்தெடுக்கவும்.
3. வறுத்தப் பொருட்கள் ஆறியவுடன், மிக்ஸியில் போட்டு நன்றாகப் பொடித்துக் கொள்ளவும்.
4. புளியை சிறிது நீரில் ஊறவைத்து, கரைத்து வைத்துக் கொள்ளவும்.
5. ஒரு அடி கனமான பாத்திரத்தில் 2 தேக்கரண்டி எண்ணெய் விட்டுச் சாம்பார் வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.
6. அதில் பச்சை மிளகாயைக் கீறிப் போட்டு வதக்கவும்.
7. மிளகாய், வெங்காயம் இரண்டும் வாசனை வர வதங்கியவுடன், நறுக்கி வைத்துள்ள காய்களைச் சேர்த்து வதக்கவும்.
8. பின் தக்காளியை நடுத்தரத் துண்டுகளாக வெட்டிச் சேர்த்து வதக்கவும்.
9. பின்னர் அத்துடன் சாம்பார் பொடி, மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றைப் போட்டுக் காய்கள் மூழ்கும் அளவிற்குத் தேவையானத் தண்ணீரைச் சேர்க்கவும்.
10. மூடி போட்டு காய்கள் வேகும் வரை மிதமான தீயில் கொதிக்க விடவும்.
11. காய்கள் வெந்ததும், புளித்தண்ணீரைச் சேர்த்துக் கொதிக்க விடவும்.
12. சாம்பார் சற்று நீர்க்க இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும் (தேவையானால் மேலும் நீரைச் சேர்த்துக் கொதிக்க விடவும்)
13. நன்றாகக் கொதிக்கும் பொழுது, நெருப்பைக் குறைத்து விட்டு, அதில் வேக வைத்துள்ள சாதம் /பருப்புக் கலவையை நன்றாக மசித்து விட்டுக் கொதிக்கும் சாம்பாரில் சேர்க்கவும்.
14. அத்துடன் பொடித்து வைத்துள்ள பொடி, பொடியாக நறுக்கிய மல்லித்தழை ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறவும்.
15. ஒரு வாணலியில் நெய்யை விட்டுச் சூடானதும் கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும், வெந்தயம், மிளகாய் வற்றல், கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்துத் தாளித்து சாதத்தில் கொட்டிக் கிளறி, அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.