வாழைக்காய்ப் பொறியல்
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. வாழைக்காய் (திரட்சியானது) - 2 எண்ணம்.
2. பெரிய வெங்காயம் - 1 எண்ணம்.
3. தக்காளி - 1 எண்ணம்.
4. பச்சை மிளகாய் - 2 எண்ணம்.
5. பூண்டு - சிறிது.
6. கடுகு - உளுந்தம் பருப்பு - 1 தேக்கரண்டி.
7. நல்லெண்ணெய் அல்லது சமையல் எண்ணெய் - 2 தேக்கரண்டி.
8. பெருங்காயத்தூள் - 1/2 தேக்கரண்டி.
9. தேங்காய்த் துருவல் - சிறிது.
10. கருவேப்பிலை - சிறிது.
11. மல்லி இலை - சிறிது.
12. உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
1. வாழைக்காய் தோலை எடுத்துவிட்டு மிக சிறிய துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் நன்றாகக் கழுவித் தனியாக ஒரு பாத்திரத்தில் வைத்துக்கொள்ளவும்.
2. வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், பூண்டு, மல்லி இலை இவைகளைச் சிறிய துண்டுகளாக நறுக்கித் தனியாக வைத்துக் கொள்ளவும்.
3. வாணலியை வைத்து சமையல் எண்ணெய்யை ஊற்றி மிதமான தீயில், எண்ணெய் நன்றாக காய்ந்தவுடன் கடுகு - உளுந்தம் பருப்பு போட்டுக் கடுகு நன்றாக வெடித்ததும் அதனுடன் உளுந்தம் பருப்பும் பொன்னிறமாக மாறியதும், பெருங்கயப்பொடியைச் சேர்க்கவும்.
4. அதில், கருவேப்பிலையைப் போட்டு உடன் நறுக்கி வைத்துள்ள பூண்டின் துண்டுகளைப் போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
5. பின்பு நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளி மற்றும் பச்சை மிளகாய் இவைகளை போட்டு நன்றாக வதக்கவும்.
6. அதில் தயாராக வைத்துள்ள வாழைக்காய்த் துண்டுகளைப் போட்டு நன்றாக கிளறவும்.
7. தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு போட்டு நன்றாகக் கிளறவும்.
8. பின்னர், மூடியிட்டு தண்ணீர் சுண்டும் வரை மிதமான தீயில் வைக்கவும்
9. சிறிது நேரத்துக்குப் பிறகு தேங்காய் துருவலை போட்டு நன்றாக கிளறி விட்டு நறுக்கி தயாராக வைத்துள்ள
மல்லி இலையைப் போட்டு இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.