காலிபிளவர் - பட்டாணி பொரியல்
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. காலிபிளவர் - 1 கப்
2. பச்சைப் பட்டாணி - 1/2 கப்
3. பச்சை மிளகாய் - 1 எண்ணம்
4. மிளகுத்தூள் - 1/2 தேக்கரண்டி
5. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
6. கடுகு - 1 தேக்கரண்டி
7. உளுந்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
8. பெரிய வெங்காயம் - 1/2
9. கறிவேப்பிலை - சிறிது
10. மல்லித் தழை - சிறிது
11. எண்ணெய் - 4 மேஜைக்கரண்டி
12. உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
1. பச்சைப் பட்டாணியை வேக வைத்து கொள்ளவும். (காய்ந்த பட்டாணியாக இருந்தால் முதல் நாள் இரவு தண்ணீரில் ஊற வைத்து மறுநாள் காலையில் வேக வைக்கலாம்)
2. வெங்காயம், காலிபிளவர் ஆகியவற்றைப் சிறியதாக நறுக்கிக் கொள்ளவும்.
3. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றிக் கொதிக்க வைக்கவும். தண்ணீர் நன்றாகக் கொதித்ததும், நறுக்கி வைத்துள்ள காலிபிளவரை போட்டு அடுப்பிலிருந்து இறக்கி விடவும். சுமார் ஐந்து நிமிடத்திற்குப் பிறகு காலிபிளவரிலுள்ள தண்ணீரை நன்கு வடித்துக் கொள்ளவும்.
4. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டுத் தாளிக்கவும்.
5. அத்துடன் பச்சைமிளகாய், வெங்காயம் போட்டு வதக்கவும்.
6. வெங்காயம் பாதி வதங்கியதும் காலிபிளவர் சேர்த்து வேகும் வரை வதக்கவும்.
7. காலிபிளவர் நன்கு வெந்தவுடன் பட்டாணியைச் சேர்த்து கிளறி மிளகுத் தூள் போட்டுக் கிளறி இறக்கவும்.
8. மேலாகக் கொத்தமல்லித் தழையைத் தூவிப் பரிமாறலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.