அவல் கொழுக்கட்டை
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. அவல் (வெள்ளை அல்லது சிவப்பு) - 1 கப்
2. தேங்காய்த்துருவல் - 3 தேக்கரண்டி
3. உப்பு- தேவையான அளவு
4. நல்லெண்ணெய் - 1 தேக்கரண்டி
5. கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி
6. வெள்ளை உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
7. பச்சைமிளகாய் - 2 எண்ணம்
8. காயம் - சிறிதளவு
9. கறிவேப்பிலை - சிறிது.
செய்முறை:
1. அவலைத் தண்ணீர் விட்டு 15 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
2. ஊறிய அவலைக் கைகளால் நன்றாக மசித்து, உப்பு சேர்த்துப் பிசையவும்.
3. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் கடலைப்பருப்பு உளுந்தம்பருப்பு, பச்சைமிளகாய், காயம் சேர்த்துத் தாளிக்கவும்.
4. தாளிசத்துடன் மசித்த அவலைப் போட்டுக் கிளறி விடவும்.
5. பின்னர் அதனுடன் தேங்காய்த் துருவல் சேர்த்து, உருண்டைகள் பிடித்து இட்லி குக்கரில் ஐந்து நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்.
குறிப்புகள்:
* தக்காளிச்சட்னி அல்லது புதினாச்சட்னி சேர்த்துச் சாப்பிட சுவையாக இருக்கும். மிளகாய்ப்பொடியும் நன்றாக இருக்கும்.
* வெங்காயம், கேரட் துருவிப் போட்டும் இக்கொழுக்கட்டையைச் செய்யலாம்.
* அவலை வெறும் தண்ணீரில் ஊற வைக்காமல் புளித்தண்ணீரில் ஊற வைத்தால், அது புளி அவல் கொழுக்கட்டை. மோரில் ஊற வைத்துச் செய்தால் மோர் அவல் கொழுக்கட்டை.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.