கொழுக்கட்டை சுண்டல்
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. அரிசி மாவு - 1 கப்
2. கடுகு - 1/2 தேக்கரண்டி
3. உளுந்து - 1/2 தேக்கரண்டி
4. மிளகாய் வற்றல் - 3 எண்ணம்
5. பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை
6. நல்லெண்ணெய் - 1 தேக்கரண்டி
7. தேங்காய் எண்ணெய் - 1 தேக்கரண்டி
8. கறிவேப்பிலை - சிறிதளவு
9. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. வாணலியில் 2 கப் தண்ணீர் ஊற்றிக் கொதிக்க விடவும்.
2. அதில் 1 சிட்டிகை உப்பு, நல்லெண்ணெய் சேர்த்துக் கலக்கவும்.
3. தண்ணீர் நன்றாகக் கொதிக்கும் போது, அரிசி மாவைச் சிறிது சிறிதாகச் சேர்த்துக் கட்டியில்லாமல் நன்றாக கலக்கவும்.
4. மாவு நன்றாக வெந்தவுடன் மூடி போட்டு மூடவும்.
5. சிறிது நேரம் கழித்து மாவு ஆறிய பின்பு, கோலிக்குண்டு அளவு உருண்டைகளாகப் பிடித்துக் கொள்ளவும்.
6. இந்த உருண்டைகளை இட்லிச் சட்டியில் போட்டு (ஆவியில்) வேக வைத்து எடுக்கவும்.
7. வாணலியில் தேங்காய் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு, உளுந்து போட்டுத் தாளிக்கவும்.
8. பின்பு அதில் காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து கலக்கவும்.
9. கடைசியாக வேகவைத்த உருண்டைகளைப் போட்டு நன்றாகக் கிளறி இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.