உருளைக்கிழங்கு சமோசா
சசிகலா தனசேகரன்
தேவையான பொருட்கள்:
1. மைதா மாவு - 200 கிராம்
2. உருளைக்கிழங்கு - 2 எண்ணம்
3. வெங்காயம் - 2 எண்ணம்
4. சீரகம் - 1 தேக்கரண்டி
5. மிளகாய்த் தூள் - தேவையான அளவு
6. எண்ணெய் - தேவையான அளவு
7. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. உருளைக்கிழங்கை வேக வைத்துத் தோல் நீக்கிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
2. வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.
3. வாணலியில் எண்ணெய் விட்டுச் சீரகம் தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
4. பிறகு உருளைக்கிழங்கைச் சேர்த்து மிளகாய்த்தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கி மசாலாவைத் தயார் செய்து வைக்கவும்.
5. மைதா மாவில் உப்பு சேர்த்து, தண்ணீர் விட்டு பிசைந்து, சப்பாத்திக்குத் திரட்டுவது போல் திரட்டி அரை வட்டங்களாக வெட்டிக் கொள்ளவும்.
6. வெட்டிய துண்டில் ஒன்றை எடுத்து, அதன் ஒரு பாதி விளிம்பில் தண்ணீர் தொட்டுக் கொண்டு, மறுபாதி விளிம்பின் மேல் வைத்து ஒட்டி கூம்பு போல் செய்து கொள்ளவும். அதனுள்ளே தயாரித்த உருளைக்கிழங்கு மசாலா சிறிது வைத்து ஓரங்களில் தண்ணீர் தடவி ஒட்டி விடவும்.
7. இதே போல் மீதமுள்ள மாவிலும் மசாலாவை வைத்து சமோசா செய்து வைக்கவும்.
8. ஒரு அடிகனமாக கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்துள்ள சமோசாவை போட்டு பொரித்தெடுக்கவும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.