அவல் கேசரி
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. அவல் - 1 கப்
2. சர்க்கரை - 1 கப்
3. நெய் - 1/4 கப்
4. ஏலக்காய்த் தூள் - 1/4 தேக்கரண்டி
5. முந்திரிப் பருப்பு - 10 எண்ணம்
6. உலர்திராட்சை - 10 எண்ணம்
7. கேசரி பவுடர் - ஒரு சிட்டிகை
செய்முறை:
1. ஒரு வாணலியில் அவலைப் போட்டு, தொட்டால் சுடும் வரை வறுத்தெடுத்து, ஆறியபின் மிக்ஸியில் போட்டு சற்று கொரகொரப்பாக பொடித்துக் கொள்ளவும்.
2. அதே வாணலியில் ஒரு தேக்கரண்டி நெய்யை விட்டு, அதில் முந்திரிப் பருப்பு, திராட்சை இரண்டையும் வறுத்தெடுத்து, தனியாக வைத்துக் கொள்ளவும்.
3. வாணலியில் 2 கப் தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும், அவல் பொடியை சிறிது சிறிதாக சேர்த்துக் கிளறவும்.
4. மிதமான தீயில், நீர் அனைத்தையும் அவல் இழுத்துக் கொண்டு மிருதுவாக வேகும் வரை கிளறிக் கொண்டே இருக்கவும்.
5. பின்னர் அதில் சர்க்கரையைச் சேர்த்துக் கிளறவும்.
6. கேசரி பவுடரையும் சேர்த்து நன்றாகக் கிளறி விடவும்.
7. கடைசியில் நெய், வறுத்த முந்திரி, திராட்சை, ஏலக்காய்த்தூள் அனைத்தையும் சேர்த்துக் கிளறி, நெய் தடவிய தட்டிலோ, கிண்ணத்திலோ மாற்றி வைக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.