தமிழ்நாட்டின் சேலை வகைள் பல வகையானவை. அவைகளில் குறிப்பிடத்தக்கதாகக் கீழ்க்காணும் சேலைகளைக் குறிப்பிடலாம்.
காஞ்சிபுரம் பட்டுச்சேலைகள்
காஞ்சிபுரம் பட்டுச் சேலைகள், காஞ்சிபுரம் நகரில் தயாராகிறது. கை வேலைப்பாடுகள், கலை நுணுக்கங்கள் கொண்ட இச்சேலைகள் இந்தியாவின் பெருமை. வெளிநாடுகளுக்கும் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
ராசிபுரம் சேலைகள்
நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் காஞ்சிபுரம் பட்டுச்சேலைகளுக்கு நிகரான தரத்தைக் கொண்டவைகளாக இச்சேலைகள் இருக்கின்றன.
வடிவமைப்பாளர் சேலைகள்
கலாச்சாரம் வளர வளர சேலை நெசவுகளில் புதுமை புகுத்துவது நடக்கின்றன. எம்ப்ராய்டரி முதல் கண்ணாடி வேலைப்பாடுகள் வரை கலையின் கைவண்ணங்கள் இச்சேலைகளில் இடம் பெறுகின்றன. இதன் விலை அதிகம்தான் என்றாலும், அணிபவரை அழகாக்கும் அற்புதம் கொண்டது.
கோவை பருத்திச் சேலைகள்
கோவை பருத்திச் சேலைகள் எப்போதுமேத் தனிச்சிறப்பு வாய்ந்தவை. அணிந்து கொள்ள மிருதுவாகவும் சருமத்திற்கு நண்பனாகவும் இருக்கும் இந்தப் புடவைகளின் தரம் பல வருடங்களுக்கு நிலைத்திருக்கும். இச்சேலைகள் தரம் மற்றும் விலை மலிவு ஆகியவற்றால் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது.
நெகமம் புடவைகள்
பொள்ளாச்சிக்கு அருகில் இருக்கும் சிறிய கிராமமான நெகமம் எனும் ஊரில் தயாராகும் பருத்திச் சேலைகள் தனித்துவமான வடிவமைப்புடன், பெரியவர்கள் அணிய மிருதுவாக இருக்கும் தன்மை கொண்டதாகவும் இருப்பதால் வயதானவர்கள் இச்சேலைகளை விரும்பி வாங்குகின்றனர்.
சேலம் சேலைகள்
சேலம் சேலைகள், பருத்தியில் பல்வேறு வண்ணச் சாயங்கள் சேர்த்து பியூஷன் முறையில் புதுமையை புகுத்தி உருவாக்கப்படுகிறது. இதன் தரம் பல வருடங்கள் நிலைத்திருக்கும். சேலைகளில் ஜரிகை பார்டர் கொண்ட சேலைகள், மற்றும் கட்டம் போட்ட பருத்திச் சேலைகள் இங்கு சிறப்பாக உருவாக்கப்படுகின்றன.
ஷிபான் சேலைகள்
எடை குறைவான இந்த வகைச் சேலைகள் அணிவதற்கு இலகுவாக இருக்கும். அதே வேளையில், நினைத்துப் பார்க்க முடியாத நிறங்களில் கிடைக்கும் இவ்வகைச் சேலைகள் தமிழர்களின் அன்றாடம் பயன்படுத்துவதற்கு எளியதாக இருக்கிறது.
ஜார்ஜெட் சேலைகள்
அணிவதற்கு சுலபமாகவும், அதே வேளையில் ஆடம்பர தோற்றத்துடனும் இருக்கும் இவ்வகைச் சேலைகளுக்குக் கல்லூரி மாணவிகள் மற்றும் இளம் வயதுப் பெண்களிடம் நல்ல வரவேற்பு இருக்கிறது.
சுங்குடிச் சேலைகள்
சுங்குடிப் புடவைகள் பல்வேறு விதமான வகைகளில் கிடைக்கின்றன. மதுரை சுங்குடி இதில் பிரபலமானது. மிக அடர்த்தியாக நெய்யப்பட்ட நெசவுகளில் இந்தப் புடவைகள் இருக்கும். அடர் வண்ணங்கள், கட்டௌம் போட்ட வடிவமைப்பு போன்றவை இதன் சிறப்பம்சம். வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்ல இவ்வகைச் சேலைகள் சரியான தேர்வாக இருக்கும்.
சின்னாளப்பட்டிச் சேலைகள்
திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டி எனும் ஊரில் உருவாக்கப்படும் இந்த வகைச் சேலைகள் பட்டுச் சேலைகளுக்கு மாற்றாக வந்த சேலைகள். முழுதும் ஜரிகைகளாலேயே நெய்யப்பட்டிருக்கும். ஆனாலும், பட்டுச்சேலை போன்ற தரம் இருக்காது என்பதால், இதன் விலை பட்டுச் சேலகளை விட மிகமிகக் குறைவு. அணிவதற்கு எளிதாகவும் இருக்கும்.
மதுரை பருத்திச் சேலைகள்
மதுரையில் நெய்யப்படும் பருத்துச் சேலைகளில் பெரும்பாலும் இரண்டு நிறங்கள் மட்டுமே இணைந்திருக்கும். அதன் முடிவில் ஜரிகை பார்டர் சேர்த்திருப்பது புடவைக்கு அழகை அதிகரிக்கும். அடர் நிறச் சேலைக்கு வெளிர் நிற பார்டர்கள் வெளிர் நிறச் சேலைகளுக்கு அடர் நிற பார்டர்கள் என மாற்றிமாற்றிக் கொடுத்திருப்பது இதன் சிறப்பு.
செட்டிநாட்டுச் சேலைகள்
காரைக்குடி அருகிலுள்ள சில ஊர்களில் நெய்யும் இந்தச் செட்டிநாட்டுச் சேலைகள் பருத்தியில் நெய்யப்பட்டவை, அதே வேளையில், இச்சேலைகளின் பார்டர்களில் கலை வண்ணம் மிகுந்திருக்கும். இப்போது புத்தர் முகம் மற்றும் தஞ்சாவூர் சிற்பங்கள் ஆகிய பல கலை சிறப்புகளை இந்த புடவைகள் தன்னகத்தேக் கொண்டிருக்கின்றன.
கைத்தறிச் சேலைகள்
கைத்தறிச் சேலைகள் தமிழ்நாட்டின் அடையாளம். காதிகிராப்ட் எனப்படும் அரசு சார்ந்து இயங்கும் கைத்தறிக் கூடங்களில் உருவாக்கப்படுகின்றன. கோ ஆப்டெக்ஸ் மற்றும் காதி கிராம பவன் கடைகளில் அதிக அளவில் கிடைக்கின்றன. அணிவதற்கு எளிதாகவும், தோற்றத்திற்கு உயர்வாகவும் காண்பிக்க வல்லது இந்த வகையான சேலைகள்.
பருத்திப் பட்டுச் சேலைகள்
கோயம்புத்தூரில் பட்டு மற்றும் பருத்தி இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து நெய்து, அதனை பருத்திப் பட்டுச் சேலைகள் என அழைக்கின்றனர். இவ்வகைச் சேலைகள் உலக அளவில் பிரபலமானது. பட்டு போன்ற ஆடம்பரமும் இருக்காது அதே சமயம் பருத்தி போன்ற எளிமையும் இருக்காது. இரண்டிற்கும் நடுவிலான தோற்றத்தை தருவதால் இவ்வகை புடவைகள் பெண்களின் பெருமையாக பார்க்கப்படுகிறது.