சோதிடன் ஒருவன் தன மகன் சோதிடத்தில் சிறந்து விளங்குவானா என்பதை சோதிக்க விரும்பினான்.
ஒரு நாள் இரவு மழையும் கொடுங்காற்றும் அடிக்கையில் அவர்கள் வீட்டுக் கதவு தட்டப்பட்டது.
சோதிடனும் மகனை விசாரிக்க சொன்னான்.
பின் அவன் எப்படிக் கையாளுகிறான் என்பதைக் கவனமாகக் கேட்டான்.
கதவைத் திறந்த பையன், வந்த ஆளிடம், “நீங்கள் வடமேற்குத் திசையிலிருந்து வருகிறீர்கள். உங்கள் பெயர் கருப்பசாமி. உங்கள் மனைவி அனுப்பி நீங்கள் வந்திருக்கிறீர்கள். நான் சொல்வதெல்லாம் சரிதானே?” என்று கேட்டான்.
அந்த ஆள் உணர்ச்சி மேலிட, “அய்யா, நீங்கள் சொன்னது முழுவதும் சரி” என்று சொல்லிவிட்டுத் தன பிரச்சினையைச் சொல்ல மகனும் சில வழிமுறைகளைக் கூறிவிட்டுப் பின் பணம் பெற்றுக் கொடு வந்தவரை அனுப்பி வைத்துவிட்டு உள்ளே வந்தான்.
ஆச்சரியத்தில் இருந்து மீள முடியாத தந்தை, “அவன் வந்த திசை, அவன் பெயர், அவன் யார் சொல்லி வந்தான் என்பதையெல்லாம் எப்படி அவ்வளவு சரியாகச் சொன்னாய்?” கேட்டார்.
மகன் சொன்னான், “கடுமையான காற்று வடமேற்குத் திசையிலிருந்து அடிக்கிறது. அவன் முடி பின் பக்கம் கலைந்து, முன் பக்கம் விழுந்திருந்தது. எனவே, அவன் வடமேற்குத் திசையிலிருந்துதான் வந்திருக்க வேண்டும். விளக்கு வெளிச்சத்தில் அவன் வைத்திருந்த குடையில் அவன் பெயர் எழுதியிருந்தது. மூன்றாவதாக, இந்த இடி மழையிலும், காற்றிலும், இருளிலும் ஒருவன் உயிரைத் துச்சமாக மதித்து வருகிறான் என்றால் அவன் மனைவி நச்சரித்திருக்க வேண்டும். எனவேதான் அவன் மனைவி சொல்லி வந்தான் என்றேன்”
தந்தைக்கு அளவிட முடியாத மகிழ்ச்சி. மகன் தன்னை விடச் சிறப்புடன் வாழ்வான் என்ற நம்பிக்கை வந்துவிட்டது.