ஒரு தீவிர பக்தன் இருந்தான் நாள் முழுவதும் ஏதாவது பிரார்த்தனை செய்து கொண்டே இருப்பான். அவனுடைய தம்பி இவனுக்கு நேர் மாறானவன். பெரிய நாத்திகவாதி.
சமீபத்தில் பக்தனின் மனைவி இறந்து விட்டாள். அவனுடைய கூட்டாளி வியாபாரத்தில் அவனை ஏமாற்றி விட்டான். அவனுடைய வீடு தீப்பிடித்து எரிந்து விட்டது. அவனுடைய குழந்தைகள் தறுதலையாய்த் திரிந்தார்கள். அதே சமயம், அவனுடைய தம்பி மிக மகிழ்ச்சியுடன் தனது மனைவி, குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தான்.
பக்தன் ஒரு நாள் தாங்க முடியாமல் கடவுளிடம், “நான் உன்னைக் குறை சொல்லவில்லை. என் வீடு எரிந்தபோதும் அதற்கு ஒரு காரணம் இருக்க வேண்டும் என்று தேற்றிக் கொண்டு உன்னையே வணங்கினேன். என் மனைவி இறந்தபோது, அதற்கு நல்ல காரணம் இருக்கும் என்று நம்பினேன். என் குழந்தைகள் எனக்கு எதிராக வந்தபோது கூட எல்லாம் உன் செயல் என்று தேற்றிக்கொண்டு உன்னைத்தான் கும்பிட்டேன். எந்நேரமும் உன்னையே நினைத்துக் கொண்டிருக்கும் எனக்கு ஏன் இத்தனை சோதனைகள்? உன்னைத் தூற்றித் திரியும் என் தம்பி சகல வசதிகளுடனும் நன்றாக வாழ்கிறானே, அது ஏன்?” என்று கேட்டான்.
கடவுள் வெறுப்புடன் சொன்னார், “நாள் முழுவதும் உன் நச்சரிப்பு தாங்காமல்தான் !”
கடவுளை எந்நேரமும் நச்சரித்துக் கொண்டிருந்தால் பாவம் அவர்தான் என்ன செய்வார்?.
- ஓசோ கதைகள்