குழம்புக்கும், ரசத்திற்கும் என்ன வித்தியாசம்?
இரண்டிலுமே பருப்பு, புளி, உப்பு, சாம்பார் பொடி, பெருங்காயம்தானே சேர்க்கிறார்கள் என்ற விவாதம் ஒரு சமயம் மகா பெரியவரின் முன் வைக்கப்பட்டது.
அபோது மகா பெரியவர் அங்கிருந்தவர்களைப் பார்த்து, ”நீங்கள் சாம்பார், ரசம் எதை முதலில் சாப்பிடுகிறீர்கள்?” என்று கேட்டார்.
அங்கிருந்த பக்தர்கள், "சாம்பாரை முதலிலும், ரசத்தைப் பிறகும் சாப்பிடுவதாகத் தங்கள் கருத்தைத் தெரிவித்தனர்.
அதைக் கேட்டு மகா பெரியவர் பெரிதாகச் சிரித்தார். பின்னர் அவர்,
“தான் என்னும் அகங்காரம் மனதில் இடம் பெற்றுவிட்டதால், நாம் குழம்பிப் போகிறோம். அதாவது சாம்பாரை போல... அது இல்லையென்றால் மனம் தெளிவாக இருக்கும் ரசம் போல. இவைகளை மறக்கக்கூடாது என்பதற்காகதான் தினமும் குழம்பு, ரசம் வைக்கிறோம். விருந்தில் முதலில் குழம்பு, ரசம், பாயசம், மோர் என வரிசைப்படி சாப்பிடுகிறோம் இல்லையா?இந்த உணவு கலாச்சாரம் வேறு எங்கேயும் இல்லை. மனிதன் பிறக்கும்போதே அவன் மனதில் "தான்" என்ற அகங்காரம் இடம் பிடித்து விடுகிறது. அவன் பலவிதமான குழப்பத்தில் ஆள்வதால் அவன் மனம் குழம்புகிறது.
அதைத்தான் முதலில் நாம் சாப்பிடும் குழம்பு எடுத்து காட்டுகிறது. அது தெளிந்து விட்டால் ரசம் போல் ஆகி விடுகிறது. அவற்றை தொடர்வது இனிமை, ஆனந்தம். அவைதான் பாயசம், மோர், பட்சணம்.
இதைப்போல் மனிதனின் வாழ்க்கைக்கும், சாப்பிடும் சாப்பாட்டிற்கும் பலவித ஒற்றுமை உண்டு. மோர் தனித்தன்மை வாய்ந்தது. பிரம்மானந்தத்துடன் நம் மனம் லயிக்க இது உதவுகிறது.
பாலிலிருந்து தயிர், வெண்ணெய், நெய், மோர் என்று தொடராக பொருட்கள் நமக்கு கிடைக்கின்றன. மோர்தான் கடைசி நிலை. அதிலிருந்து எதையும் பிரித்து எடுக்க முடியாது. அதனால்தான் பரமாத்மாவைக் கலந்த பின், மேலே தொட ஏதும் இல்லை என்பதை மோர் தெளிவாக்குகிறது” என்றார்.