முகலாய மன்னர் அவுரங்கசீப் இஸ்லாம் மதத்தில் மிகுந்த பற்றுடையவர். எவ்வளவு வேலைகளிருந்தாலும் தொழுகை நேரத்தில் தவறாமல் தொழ வந்திடுவார்.
ஒரு நாள் தொழுகை நேரத்தில் அனைவரும் கூடி விட்டனர். ஆனால், அன்று என்ன காரணத்தாலோ மன்னர் சரியான நேரத்திற்கு வர முடியவில்லை.
எனவே, அந்த மசூதியின் இமாம் தொழுகையை ஆரம்பிக்காது சற்று தாமதித்தார்.
அப்போது மன்னரும் வந்து விட்டார்.
தொழுகை ஆரம்பம் ஆகி விட்டது.
மன்னர் அமைதியாக அதில் கலந்து கொண்டார். முடிந்ததும் அரண்மனை திரும்பினார்.
உடனடியாக அந்த இமாமை பதவியிலிருந்து தூக்கி எறிந்தார்.
அமைச்சர் கேட்டார், ''ஒழுக்கத்தில் சிறந்த அந்த இமாமின் பதவியை ஏன் பறித்தீர்கள்?''
மன்னர் சொன்னார், ''நான் இந்தப் பூவுலகில் ஒரு சிறு நிலப் பகுதியைச் சிறிது காலம் ஆளப் போகிறவன். எனக்காக இந்தப் பேரண்டத்தை நிரந்தரமாக ஆளும் இறைவனுக்கான தொழுகையை அவர் தாமதப்படுத்தி விட்டாரே. அதை எப்படி ஏற்றுக் கொள்வது?''