கேரளாவில் ஸ்ரீ நாராயணகுரு என்றொரு மகான் இருந்தார்.
அவர் ஒருநாள் தோட்டத்தில் வரப்பு வழியாக நடந்து கொண்டிருந்தார்.
அப்போது எதிரில் நம்பூதிரி ஒருவர் வந்தார்.
நம்பூதிரி கேரளத்தில் ஒரு உயர்ந்த ஜாதியினர். அவர்கள் வந்தால் எதிரில் வருபவர்கள் வழி விட வேண்டும் என்பது அங்கு எழுதப்படாத சட்டம்.
ஆனால் நாராயணகுரு வழிவிட்டு ஒதுங்கி நிற்கவில்லை. அவர் யாரென்று அறியாத நம்பூதிரி அவர் வழிவிட்டு ஒதுங்கி நிற்க வேண்டும் என்று எதிர் பார்த்தார்.
அவர் அவ்வாறு செய்யாது போகவே அவரைப் பார்த்து, "நீர் என்ன ஜாதி?'' என்று கேட்டார்.
குரு அவர்கள், ''என்னைப் பார்த்தால் என்ன ஜாதி என்று உமக்குத் தோன்றுகிறது?''என்று கேட்டார்.
உடனே நம்பூதிரி,''ஒருவரைப் பார்த்துத் தெரிந்து கொள்ள முடியுமா ஜாதியை?''என்று பதில் கேள்வி போட்டார்.
நாராயணகுருவும் உடனே,''பார்த்துத் தெரியாத ஒரு விசயத்தைக் கேட்டுத் தெரிந்து கொள்ள முடியுமா?''என்று எதிர் கேள்வி கேட்க, இவர் ஒரு மகானாக இருக்க வேண்டும் என்று உணர்ந்து அவருக்கு வழிவிட்டு நம்பூதிரி ஒதுங்கி நின்றார்.