ஒரு பணக்காரனுக்கு மிகவும் அழகான மகள் ஒருத்தி இருந்தாள். அவள் வளர்ந்தவுடன் அவளுக்குத் திருமணம் செய்து வைக்க முடிவெடுத்து ஊரில் உள்ள தகுதியான இளைஞர்களுக்கு ஒரு போட்டி வைப்பதாகவும், அதில் வெற்றி பெறும் இளைஞனுக்குத் தன் மகளை மணமுடித்து வைப்பதாகவும் அறிவித்தான்.
போட்டி நாள் அன்று, ஊரிலுள்ள வலுவான, திறமையான, புத்திசாலியான இளைஞர்கள் எல்லோரும் கூடினார்ர்கள். சிலர், கையில் பேப்பரும் பேனாவுடனும், சிலர் கையில் கத்தியுடனும், சிலர் பயங்கரமான ஆயுதங்களுடனும் இருந்தனர்.
அந்தப் பணக்காரன் போட்டிக்கு வந்திருந்த அனைவரையும் அருகிலிருந்த அவனது நீச்சல் குளத்துக்கு அழைத்துச் சென்றான்.
"இந்த நீச்சல் குளத்தில், இந்த முனையிலிருந்து, எதிர் முனைக்கு முதலில் யார் நீந்திக் கடந்து வருகிறீர்களோ, அவனுக்குத்தான் என் மகளை திருமணம் செய்து தருவேன்"
அவன் சொல்லி முடித்த வினாடியே, கடகடவென அனைவரும் நீச்சலுக்கு தயாராக, வேகமாக உடைகளை கழற்ற ஆரம்பித்தனர்.
அப்போது அந்தப் பணக்காரன், "அது மட்டுமில்லை... கூடவே ஒரு கோடி ரூபாய் பணமும், ஒரு தனி பங்களாவும் கூட தருவேன். அப்பொழுதுதானே, என் அருமை மகள் தன் மணவாழ்வை சுகமாக ஆரம்பிக்க முடியும் என்றான்.
"சரி... உங்கள் எல்லோருக்கும் நல்வாழ்த்துகள்! என் மருமகனை, நான் நீச்சல் குளத்தின் மறு கரையில் சந்திக்கிறேன்" என்றவாறு அங்கிருந்து நடக்க ஆரம்பித்தான்.
சொல்லி முடித்தவுடன்... மொத்த இளைஞர்களும், இன்னமும் வேகமாக தண்ணீரில் இறங்க நினைத்தனர். அப்போது அந்தப் பணக்காரனின் ஹெலிகாப்டர், அந்த நீச்சல் குளத்துக்கு நேர் மேலே பறந்து வந்து, நூற்றுக்கணக்கான முதலைகளை, அந்தக் குளத்தில் இறக்கிவிட்டுச் சென்றது.
அவ்வளவுதான்! அத்தனை பேரும், மரண பயத்தில் உடனேப் போட்டியிலிருந்து பின்வாங்கினர். மீண்டும் தங்கள் உடைகளை மாட்டிக்கொள்ள ஆரம்பித்தனர்.
"இதென்ன பைத்தியக்காரத் தனமாக இருக்கிறது? யாரால் இது முடியும்? இதில் எவன் ஜெயிக்கிறான்?" என்று சத்தமாய் பேச ஆரம்பித்தனர்.
அப்பொழுது… திடீரென்று, ஒருவன் குளத்தில் குதிக்கும் சத்தம்.
அத்தனைப் பேரும் மூச்சுக்கூட விட மறந்து... உச்சபட்ச அதிசயத்தில், அவனையேக் கண்ணிமைக்காமல் கவனிக்க ஆரம்பித்தனர்.
அந்த இளைஞன்... மிகவும் லாவகமாக, அத்தனை முதலைகளிலுமிருந்து விலகி விலகி, வேகமாய் நீந்தி, அடுத்த கரையில் விருட்டென ஏறி வெடவெடவென நின்றான்.
பணக்காரனால், தன் கண்களை நம்ப முடியவில்லை.
"பிரமாதம்.! நான் தர்றதா சொன்ன விஷயங்களுக்கும் மேல... உனக்கு என்ன வேண்டுமோ கேள் தருகிறேன்..." என்றான்.
அந்த இளைஞனோ, இன்னமும் நடுக்கத்திலிருந்து மீளவில்லை. பயத்தில் வாய் தந்தியடித்தது, கண்கள் அரண்டு போய் இருந்தன.
பின் ஒருவித வெறியுடன், "அதெல்லாம் இருக்கட்டும்... என்னை இந்தக் குளத்தில் தள்ளிவிட்டவனை மட்டும் யாருன்னு எனக்கு காட்டுங்கள்" என்று கத்தினான்.
இதிலிருந்து என்ன நீதி தெரிகிறது?
1. முதலைகள் இருக்கும் நீரில் தள்ளிவிடப்படும் வரை... அவனுடைய திறமை அவனுக்கே என்னவென்று தெரியாது.
2. உண்மையில் அவனுக்குள்ளிருந்த திறமையை வெளிக்கொண்டு வந்தவர்கள் அவனைக் குளத்தில் தள்ளிவிட்டவர்கள்தான்.
3. சிலநேரம், மிகவும் மோசமான தருணங்களைக் கடக்கும் பொழுதுதான், நம் உள்ளிருக்கும் நிஜத்திறமை வெளிப்படும்.
4. இதுபோன்ற அசாத்திய பிரச்சினைகளில் வலுக்கட்டாயமாக தள்ளப்படும் பொழுதுதான், சிலர் வாழ்வின் உயர் இலக்கை அடையமுடிகிறது.
அது சரி, குளத்தில் விடப்பட்ட முதலைகள் அனைத்தும் ரப்பர் முதலைகள் என்பது, அந்தப் பணக்காரனுக்கு மட்டும்தான் தெரியும். இப்போது உங்களுக்கும் தெரிந்துவிட்டது... வெளியில் சொல்லி விடாதீர்கள்...