ஏழை ஒருவனின் குழந்தை, தாயிடம் சொன்னது, ''அம்மா, எனக்கு இந்த மண் பொம்மை வேண்டாம். பார், எல்லாம் உடைந்து இருக்கிறது. பக்கத்து வீட்டு அண்ணன் நல்ல நல்ல பொம்மைகள் எல்லாம் வைத்திருக்கிறான். அது போல பொம்மைகள் வாங்கித்தா”
அடுத்த வேளைச் சாப்பாட்டிற்கே வழியில்லாத நிலையில் குழந்தைக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் விக்கித்து நின்றாள் அந்த ஏழைத்தாய்.
பக்கத்துவீடு ஒரு பணக்காரரின் வீடு. அந்த வீட்டுப் பையனைப் பார்த்துக் கொள்ள ஒரு வேலைக்காரப் பெண் விளையாட விதவிதமான பொம்மைகள்.
விளையாடிக் கொண்டிருந்த பையன் அந்தப் பெண்ணிடம் சொன்னான், ''ஆயா, எனக்கு இந்த பொம்மையெல்லாம் வேண்டாம். பக்கத்து வீட்டுத் தம்பி அழகான மண் பொம்மைகள் வைத்து விளையாடுகிறான். எனக்கு அது போல பொம்மைகள் வேண்டும்'' என்று கூறி அழ ஆரம்பித்தான்.
அவன் அழுகையை அடக்க வழி தெரியாது திகைத்து நின்றாள் வேலைக்காரப்பெண்.
பொன்னென்றும் மண்ணென்றும் வேறுபாடு அறியாக் குழந்தைகள், பொன்னுக்கும், மண்ணுக்கும் போராடுகிறது. அதே குழந்தைகள் வளர்ந்த பெரியவர்களான பின்பு...?