ஊரின் கடைசியிலிருந்த ஆறு, அதன் அருகில் ஒரு ஆலமரம். ஆலமரத்தின் அடியில் ஒரு முனிவர் அமர்த்திருந்தார். முனிவரின் முன்னால் பணிவுடன் நின்றிருந்தான் அவன். தனது காவித் துணியால் சுற்றப்பட்ட மூட்டையிலிருந்து பெரிய கண்களை கூசும் ஒளி கொண்ட வைரத்தை எடுத்து இவன் கையில் திணித்தார். இரு கைகளிலும் நிறைந்திருந்த அந்த வைரத்தைப் பரவசத்துடன் பார்த்தான்.
திடுக்கிட்டு விழித்தான், மணி காலை 5 ஆகியது.
அந்த வைரம் மட்டும் கிடைத்தால், எனது வாழ்க்கையே மாறிவிடுமே.
விடியற்காலை கண்ட கனவு பலிக்கும் என்று சிலர் சொன்னது அவனுக்கு நினைவு வந்தது. மீண்டும் தூக்கம் வர வில்லை. எப்பொழுது விடியும் என காத்திருந்தான்.
விடிந்தத்தும் ஆற்றுப்பக்கமுள்ள ஆலமரத்தைத் தேடி ஓடினான்.
அங்கே அவன் கனவில் கண்டபடி முனிவர் ஒருவர் காவித்துணி சுற்றிய மூட்டையுடன் அமர்ந்திருந்தார். இந்தக் காட்சியை அவனால் நம்பமுடியவில்லை.
அவர் அருகில் சென்றதும்..."குழந்தாய் வைரம் வாங்க வந்தாயா? " என கேட்டார்.
அவன் மிகவும் வியப்படைந்தான். அவன் மெதுவாக "ஆமாம்" என்பது போல் மேலும் கீழும் தலை அசைக்க...
தனது மூட்டையில் இருந்து மிகப் பெரிய வைரத்தை எடுத்துக் கொடுத்தார்.
வைரத்தை வாங்கியதும் வீட்டிற்கு ஓடி வந்தான், யாருக்கும் கிடைக்காத பெரிய வைரம் தனக்குக் கிடைத்ததை எண்ணி மகிழ்ந்தான். இதை விற்று என்ன செயலாம் என திட்டமிடத் தொடங்கினான்.
திடீரென அவனுக்குள் ஒரு வெறுமை பரவியது.... அவன் உள்மனதுக்குள் ஒரு குரல் சொல்லியது...
மாபெரும் மகிழ்ச்சியை வழங்கும் வைரத்தை எந்த வருத்தமும் இல்லாமல் அந்த முனிவர் நமக்கு கொடுத்தார் என்றால்.... அவரிடம் இதைக் காட்டிலும்....விலைமதிக்க முடியாத வேறு ஒரு பொருள் இருக்கலாம். அப்படி இல்லாமல் நம்மிடம் இந்த வைரத்தை எப்படிக் கொடுப்பார். என்று அவன் கற்பனை ஓடியது.
முனிவரிடம் விலை மதிக்க முடியாத வேறு என்ன பொருள் இருக்கும்? அவரிடமே கேட்கலாம் என மீண்டும் ஆற்றங்கரைக்குச் சென்றான்..
அங்கு முனிவர் அமர்ந்திருந்தார்.
அவர், "வா குழந்தாய், இந்த வைரத்தைக் காட்டிலும் என்னிடம் இருக்கும் விலை மதிக்க முடியாத ஒரு பொருள் உனக்கு வேண்டுமா?" என்று கேட்டார்.
அவனும் "ஆம்" என்பது போலத் தலை அசைத்தான்.
அவன் கையில் உள்ள வைரத்தை வாங்கி ஆற்றில் எறிந்தார் அவர்.
தனது மூட்டையில் இருந்து காவித் துணியை எடுத்து அவனிடம் கொடுத்தார்.
"குழந்தாய், நான் கண்ட பெரும் செல்வத்தை உனக்குக் காட்டுகிறேன் வா... என் பின்னால்...." என்றபடி அவர் நடக்க அவரின் பின்னால் அவன் சிஷ்யனாகத் தொடர்ந்தான்.