இரண்டு நண்பர்கள் ஒரு பாலைவனத்தின் நடுவே நடந்து போய்க் கொண்டு இருந்தார்கள்.
பயணத்தின் இடையில், சிறிது நேரத்தில் அந்த இரண்டு நண்பர்களுக்கிடையே எதையோ குறித்து விவாதம் எழுந்தது. விவாதத்தின் முடிவில் ஒரு நண்பன் கோப மிகுதியில் மற்றவனின் கன்னத்தில் அறைந்தான்.
அறை வாங்கிய நண்பன் அதைப் பற்றி ஒன்றும் சொல்லாமல் பாலைவன மணலில், "இன்று என்னுடைய சிறந்த நண்பன் என் கன்னத்தில் அறைந்து விட்டான்" என்று எழுதினான்.
அதன் பிறகும் அவர்களின் பயணம் தொடர்ந்தது. குளிப்பதற்காக ஓரிடத்தில் சிறிது நேரம் தங்க நினைக்கையில் அறை வாங்கிய நண்பன் புதை மணலில் சிக்கி உள்ளே மூழ்கத் தொடங்க அடித்த நண்பன் அடி வாங்கியவனை புதை மணலில் இருந்து கஷ்டப்பட்டுக் காப்பாற்றினான்.
இப்போதும் காப்பாற்றப்பட்ட நண்பன் எதுவும் சொல்லாமல் ஒரு நீளமான கல்லை எடுத்து அதில், "இன்று என்னுடைய சிறந்த நண்பன் என் உயிரைக் காப்பாற்றினான்" என்று பொறிக்கத் தொடங்கினான்.
முதல் தடவை அவனை அடித்து விட்டு, இப்போது காப்பாற்றிய அந்த நண்பன், "என்ன இவன், எதற்கும் அலட்டிக் கொள்ளாமல் எதையாவது எழுதி வைத்துக் கொண்டே இருக்கிறான்... முன்பு மணலில் எழுதினான், இப்போது கல்லில் பொறித்து வைக்கிறான்..." என்று குழம்பிப் போனான்.
குழப்பத்துடன், "ஏன் இப்படிச் செய்கிறாய்?" என்றான்.
அதற்கு அந்த நண்பன், "நம் காயங்களை நாம் மணலில் எழுத வேண்டும் அப்போது தான் மன்னிப்பு எனும் காற்று அடிக்கையில் அவை கலைந்து மறையும். அதே சமயம் நமது லாபங்களை நாம் பெற்ற உதவிகளை கல்லில் தான் பொறித்து வைக்க வேண்டும். அதை எந்தக் காற்றும் வந்து கலைத்து விடாமல் இருக்க வேண்டும்."
அதாவது சிலரால் நமக்கு ஏற்பட்ட மனக் காயங்களை மறந்து விட வேண்டும். சிலரால் கிடைக்கப் பெற்ற உதவிகளை என்றும் நினைத்துப் பார்க்க வேண்டும்.