ஒரு ஊரில் காகமொன்று இருந்தது. அது கருப்பு நிறத்தில் இருப்பதை வெறுத்தது.
ஒரு நாள் ஒரு குளக்கரையில் இருந்த மரத்தின் மீது அமர்ந்திருந்தது.
அப்போது நீரில் இரு அன்னப்பறவைகள் நீந்திக் கொண்டிருந்தன.
அவற்றைப் பார்த்த காகம், அந்த அன்னப்பறவைகளைப் போல நான் வெள்ளையாக இல்லையே என வருந்தியது.
அந்தப் பறவைகளைப் போல நாமும் தண்ணீரில் நீந்தினால் தன் சிறகுகளில் இருக்கும் கரிய நிறம் போய் வெண்மை நிறம் வந்துவிடலாம் என எண்ணியது.
உடனே... அன்று முழுதும் அது தண்ணீரில் நீந்தியது. தன் இறகுகளை தேய்த்து... தேய்த்து பார்த்தது.
அதனால் சில இறகுகளையும் இழந்தது.
அதைப் பார்த்த அன்னப்பறவைகளில் ஒன்று காகத்திடம், “இறைவன் படைப்பில் ஒவ்வொரு உயிரினமும், ஒவ்வொரு உருவம், நிறம் பெற்றவை. அதை மாற்ற நினைத்தால் நடக்காது” என அறிவுரை கூறியது.
மேலும், “கடவுள்... எந்த அங்கஹீனத்தையும் கொடுக்காமல் நம்மைப் படைத்ததற்கு நன்றி சொல்லவேண்டும்” என்றது.
ஒருவன் கருப்பா, சிவப்பா? என்பதில் இல்லை உயர்வு, தாழ்வு. அவர்கள் செய்யும் செயல்களில்தான் இருக்கிறது என்பதை அனைவரும் உணர வேண்டும்.