செருப்புக் கடைக்கு ஒருவர் சென்றார்.
அங்கிருந்த பணியாளர் அவரை வரவேற்று அமர வைத்தார். பின்னர், அவருக்கு அங்கிருக்கும் செருப்புகளை ஒவ்வொன்றாக எடுத்துக் காட்டினார்.
அவர் விரும்பிய செருப்புகளை, அவர் காலடியில் அமர்ந்து ஒவ்வொன்றாக அணிவித்துக் காட்டினார்.
அங்கிருந்த பணியாளர் செய்தது அவருக்கும் மன வருத்தத்தைத் தந்தது.
“ஐயா, இதை நானே போட்டுப் பார்க்கிறேன்" என்றார்.
அதற்கு அந்தப் பணியாளர் ஒப்புக் கொள்ளவில்லை... அவரே அவருக்கு உதவினார்.
உடனே அவர், “அய்யா... நானும் மனிதன்... நீங்களும் மனிதன்... என் கால்களை நீங்கள் தொடுவது எனக்கு ஒரு மாதிரி மன வருத்தத்தைத் தருகிறது" என்றார்.
அதற்கு அந்தப் பணியாளர் சிரித்தபடி சொன்னார்:
"ஐயா, இந்தக் கடைக்கு வெளியேப் போய் விட்டால், நீங்கள் எவ்வளவு ரூபாய் கொடுத்தாலும் நான் உங்கள் கால்களைத் தொடமாட்டேன். அது என் சுய மரியாதை. கடைக்குள் நீங்கள் எவ்வளவு ரூபாய் கொடுத்தாலும் உங்களுக்கு உதவுவதை நான் நிறுத்த மாட்டேன். ஏனென்றால், இது என் தொழில். இதை நான் என் தொழிலுக்கு செய்யும் மரியாதையாகவேக் கருதுகிறேன்" என்றார்.