ஆறு வயது சிறுவன் ஒருவன் தன் நான்கு வயது தங்கையை அழைத்துக் கொண்டு கடைத் தெருவின் வழியே சென்று கொண்டு இருந்தான்.
ஒரு கடையின் வாசலில் இருந்த பொம்மைகளைப் பார்த்துத் தயங்கி நின்ற தங்கையைப் பார்த்து, "எந்தப் பொம்மை வேண்டும்?'' என்றான்.
அவள் கூறிய பொம்மையை எடுத்து அவள் கையில் கொடுத்து விட்டு, ஒரு பெரிய மனிதனைப் போன்று கடையின் முதலாளியை பார்த்து, ''அந்தப் பொம்மை என்ன விலை?'' என்று கேட்டான்.
அதற்குச் சிரித்துக்கொண்டே அந்த முதலாளி, ''உன்னிடம் எவ்வளவு உள்ளது?'' என்று கேட்டார்.
அதற்கு அந்தச் சிறுவன்.... தான் விளையாடச் சேர்த்து வைத்திருந்த கடல் சிப்பிகளைத் தன் பாக்கெட்டில் இருந்து எடுத்துக் கொடுத்தான்.
''இது போதுமா...?" என்று கவலையுடன் கேட்டான்.
அதற்கு அந்தக் கடைக்காரர் அவனின் கவலையான முகத்தை பார்த்து கொண்டே,"எனக்கு நான்கு சிப்பிகள் போதும்!'' என்று மீதியை அவனிடமேத் திருப்பிக் கொடுத்தார்.
சிறுவன், மகிழ்ச்சியோடும் மீதியிருக்கும் சிப்பிகளோடும்.... தன் தங்கையை அழைத்துக் கொண்டு அந்த பொம்மையை எடுத்துக்கொண்டு சென்றான்.
இதை எல்லாம் கவனித்துக் கொண்டிருந்த அந்தக் கடையின் வேலையாள்.... முதலாளியிடம், "அய்யா, ஒன்றுக்கும் உதவாத சிப்பிகளை வாங்கிக்கொண்டு விலையுயர்ந்த பொம்மையைக் கொடுத்து விட்டீர்களே..." என்றான்.
அதற்கு அந்த முதலாளி, ''அந்தச் சிறுவனுக்குப் பணம் கொடுத்தால்தான் பொம்மை கிடைக்கும் என்று புரியாத வயது. அவனுக்கு அந்த சிப்பிகள்தான் உயர்ந்தவை. நான் பணம் கேட்டால், அவன் எண்ணத்தில், பணம்தான் உயர்ந்தது என்ற மாற்றம் வந்து விடும்... அதைத் தடுத்து விட்டேன். மேலும், தன் தங்கை கேட்டவற்றை தன்னால் வாங்கித் தர முடியும் என்ற தன்னம்பிக்கையையும் அவனுக்குள் விதைத்து விட்டேன். என்றோ ஒரு நாள்... அவன் பெரியவன் ஆகி இந்த நிகழ்வினை நினைத்துப் பார்க்கையில், இந்த உலகம் நல்லவர்களால் ஆனது! என்ற நல்ல எண்ணம் அவன் மனதில் தோன்றும். ஆகையால், அவன் எல்லோரிடமும் அன்பு காட்டத் தொடங்குவான். உலகம் அன்பினால் கட்டமைக்கப்பட வேண்டும்'' என்றார்.