நன்றாக வாழ்ந்த ஒருவன் வறுயதான காலத்தில், தனது வறுமையைப் போக்க, தான் இழந்த பொருட்களையெல்லாம் திரும்பத் தரவேண்டு இறைவனிடம் முறையிட்டான்.
“இறைவா, நான் இழந்ததையெல்லாம் திரும்பத் தா... என் வேண்டுதலை ஏற்று நான் இழந்தையெல்லாம் எனக்குத் திரும்பக் கொடு” என்று சொல்லி வேண்டினான்.
அவனது வேண்டுதலில் இரங்கிய இறைவன் அவனிடம், “பக்தனே, நீ இழந்தது எவை?” என்று கேட்டார்.
“நான் பலவும் இழந்திருக்கிறேன். அதற்கென்று கணக்கு எதுவுமில்லை என்னிடம்...” என்றான் அவன்.
“கணக்கில்லாமல் இழந்திருக்கிறாயா? அதில் ஏதாவது ஒன்றிரண்டைச் சொல்” என்றார் இறைவன்.
“கால மாற்றத்தில் என் இளமையை இழந்தேன், என் அழகை இழந்தேன், வயதாக ஆக உடல் நலத்தை இழந்தேன்... இப்படியே நான் இழந்தது ஏராளமாக இருக்கிறது” என்று சொல்லி வருத்தப்பட்டான்.
பின்னர் அவன், “நான் எதையெல்லாம் இழந்தேனோ, அதையெல்லாம் மீண்டும் தா” என்று இறைவனிடம் கேட்டான்.
அதனைக் கேட்டுச் சிரித்த இறைவன், “பக்தனே, நீ கல்வி கற்றதால் அறியாமையை இழந்தாய். உழைப்பின் பயனால் வறுமையை இழந்தாய். உறவுகள் கிடைத்ததால் தனிமையை இழந்தாய். நல்ல பண்புகளால் எதிரிகளை இழந்தாய். இதைப் போன்று இன்னும் பல இருக்கிறது. நீ இழந்த இவற்றையெல்லாம் திரும்பத் தரட்டுமா?” என்று கேட்டார்.
அப்போதுதான் அவனுக்கு இழப்பின் மறுபக்கம் என்ன கிடைத்தது என்பதையும், வாழ்க்கையின் ஓட்டத்தில் இழப்பின் மறுபக்கம் பெரும் பயனாகவே அமைந்திருக்கிறது என்பதையும் உணர்ந்தான்.
உடனே, “இறைவா, நீ எனக்கு எல்லாம் தந்திருக்கிறாய்... எனக்கு வேண்டியதையெல்லாம் தந்திருக்கிறாய். இது தெரியாமல் நான் உன்னிடம் இழந்ததையெல்லாம் திரும்பத் தா என்று கேட்டது தவறுதான்” என்றான்.
அதனைக் கேட்ட இறைவன் மகிழ்ந்து அங்கிருந்து மறைந்தார்.