ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோத் தேடிக்கொண்டிருந்தனர்.
கணவர்என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது. வைத்தியரும் சொன்னதில்லை.
மனைவியின் வேலை அலைந்து திரிந்து வரும் கணவருக்கு உணவு சமைத்து வைப்பது, பரிமாறுவது, கை கால்களை அமுக்குவது போன்ற பணிவிடைதான்.
இப்படியேப் பல ஆண்டுகள் கழிந்து இருவருமே வயதாகி விட்டனர். இருப்பினும் அவர்கள் தேடுவதை நிறுத்தவில்லை.
ஒருநாள் வைத்தியர் வழக்கம் போலக் காட்டுக்குள் அலைந்து திரிந்து விட்டு வரும்போது அங்கே மனைவியைக் காணவில்லை. மாறாக இளம்பெண் ஒருத்தி நின்று கொண்டிருந்தாள்.
வைத்தியரைப் பார்த்ததும் அவர் காலில் விழுந்து வணங்கினாள்.
வைத்தியருக்கு ஒன்றும் புரியவில்லை.
“யாரம்மா நீ?” என்று கேட்டார்.
அதற்கு அந்தப் பெண், “நான்தான் உங்கள் மனைவி” என்றாள்.
வைத்தியருக்கு மிகவும் குழப்பம்.
“என்ன நடந்தது?” என்று கேட்க மனைவி நடந்ததைச் சொல்ல ஆரம்பித்தாள்.
"உங்களுக்காகக் கூழ் காய்த்துக் கொண்டிருந்தேன். காய்ச்சிய கூழைக் கலக்கும் கரண்டி உடைந்து விட்டது. அதனால் அங்கே கிடந்த ஒரு குச்சியை எடுத்துக் கலக்கினேன். கூழ் மொத்தமும் கருப்பாகி விட்டது. அந்தக்கூழை இறக்கி வைத்து விட்டு வேறு கூழ் காய்ச்சினேன். நீங்கள் வரத் தாமதமானதும் கருகி கிடந்த கூழை நான் குடித்து விட்டேன். குடித்த அரை நாழிகையில் எனது முதுமை போய் இப்படி இளம்பெண் ஆகிவிட்டேன்" என்றாள்.
வைத்தியர் பதறியபடி, "எங்கே அந்தக் குச்சி? அதைத்தானே நான் இத்தனை ஆண்டுகளாகத் தேடிக்கொண்டிருந்தேன்" என்று சொல்ல,
அதற்கு அந்த மனைவி, "அதைத்தான் நான் அடுத்த கூழ் காய்ச்சும்போது அடுப்பில் வைத்து எரித்து விட்டேனே?" என்றாள்.
வைத்தியர் அதைக்கேட்டு மயங்கிச் சாய்ந்தார்.