மகத தேசத்தின் கடைக்கோடியில் இருக்கும் கிராமத்தில் வயதான விவசாயி வசித்து வந்தான்.
அவனுக்குச் சிறிய விவசாய நிலமும், வீட்டின் முன்பு ஒரு பசு மாடும் சொத்தாக இருந்தன. நிலத்தில் விவசாயம் செய்தும், பசுவிடம் பால் கறந்தும் வாழ்கையை நடத்தி வந்தான்.
நம்பிக்கையாய் வாழ்க்கையை வாழ்ந்து வந்தவனுக்கு... “வானம்” கைக்கொடுக்கவில்லை. மழையில்லாததால், விவசாயம் செய்ய முடியவில்லை.
விவசாயம் இல்லாததால், போதிய தீவனம் பசுமாட்டிற்குக் கிடைக்கவில்லை. வீட்டில் தானியமும் இல்லை, பசுவின் மடியில் போதிய பாலுமில்லை.
ஒரு நாள் அதிகாலை எழுந்தபோது, பசி எடுக்க ஆரம்பித்தது. வீட்டின் எதிரேக் கட்டப்பட்டிருந்த பசுவின் மடியைப் பார்த்தான். ஏதோ நம்பிக்கையில், பசுவின் மடியைப் பிடித்து வேகமாக அழுத்திப் பால் சுரக்கும் காம்புகளை நீவி...நீவி... வேகமாய் அழுத்தியும், பால் வராமல் ரத்தமே வர ஆரம்பித்து... வலியால் “அம்மா” என்று அலறியது அப்பசு.
அந்த நேரத்தில், மகத தேசத்தின் அரண்மனைப் பணியாளர்கள் வர... பசுவின் அலறல் கேட்டு, “பசுவைத் துன்புறுத்தக் கூடாதே, நீ ஏன் அப்படி செய்தாய்?” என்று அரசருக்கு முன்னால் கொண்டு போய் அவனை நிறுத்தி விட்டனர்.
“நீ ஏன் பசுவின் பால் காம்புகளை இரத்தம் வருமளவுக்கு அழுத்தித் துன்புறுத்தினாய்?” அரசர் கேட்டார்.
“அரசே, நிலத்தில் விளைச்சல் இல்லை, ஆதலால் வீட்டில் தானியமும் இல்லை, பசிக் கொடுமையால், பால் குடித்தாவது தேற்றிக் கொள்ளலாம் என்று நினைத்துத்தான் அப்படிச் செய்தேன் துன்புறுத்துவது என் நோக்கமல்ல” என்று விளக்கமளித்தான்.
“அதெப்படி, பசுவின் மடியில் பாலிருந்தால்தானே, பால் சுரக்கும், பால் சுரக்காத பசுவினை துன்புறுத்துவது நியாயமில்லையே, நீ செய்தது தவறில்லையா” உனக்குத் தண்டனை உண்டு” என்றார்.
“பால் வரும் அரசரே” என்றான்.
“அரசரிடமே விதண்டாவாதமா? யாரங்கே, இவனை இருட்டுக் கொட்ட்டியில் அடைத்து வையுங்கள்” என்றார்.
“மன்னா, நான் சொல்வதைக் கேட்டுவிட்டு, எனக்குத் தண்டனையை நிறைவேற்றுங்கள்” என்றான் வயதான விவசாயி.
“நாட்டில் மழையில்லாததால் விளைச்சல் இல்லை, விவசாய நிலங்கள், வெடித்துக் கிடக்கிறது. வறண்ட பூமியாகி விட்டது. குடிதண்ணீருக்கே மக்கள் அலைகிறார்கள். இந்த இக்கட்டான நிலையிலும், அரண்மனைப் பணியாளர்கள் மக்களிடம் துன்புறுத்தி வரி வசூல் செய்து கஜானாவை நிரப்பி வருகிறார்கள். அது நியாயமென்றால்… பசுவின் மடியில் பால் கறந்தது நியாயம்தானே” என்றான்.
அதைக் கேட்ட அரசன், “யாரங்கே, இந்தப் பெரியவரைத் தகுந்த மரியாதையோடு, அவருடைய இருப்பிடத்திலேயே விட்டு விட்டு… அவருக்குத் தேவையான உணவு தானியங்களையும் அரண்மனைக் கிடங்கிலிருந்து அனுப்பி வையுங்கள்” என்று ஆணையிட்டான்.