ஒரு பெண்ணுக்கு இரண்டு தன்னம்பிக்கை பாட்டுகளும், அவற்றின் பொருளும் தெரியும். ஆனால், அது தனக்கு மட்டுமே தெரிந்திருக்க வேண்டும். யாருக்கும் தெரிந்தால் அவர்களும் தன்னம்பிக்கை பெற்று முன்னேறி விடுவார்கள் எனக் கருதி, கணவனிடம் கூட சொல்லாமல் இருந்தாள்.
அவன் தன்னை விட புத்திசாலியாகி விடக்கூடாதே என்ற நல்லெண்ணமே அதற்குக் காரணம்.
அதனால் கோபமடைந்த அந்த பாடல்களும், பொருளும் அவளைப் பழிவாங்க எண்ணின.
அவை இரு செருப்புகளாக மாறி அவள் வீட்டு வாசலில் கிடந்தது. அவற்றின் பொருள், ஆண்கள் அணியும் சட்டையாக மாறி அவள் வீட்டு நாற்காலியில் கிடந்தது.
வெளியே சென்ற கணவன் வந்தான்.
செருப்பைப் பார்த்து யாரோ வந்திருக்கிறார் என யூகித்தான். உள்ளே கிடந்த சட்டையைப் பார்த்து, யார் வந்தது? என மனைவியிடம் கேட்டான்.
யாரும் வரவில்லையே! என அவள் கையை விரிக்க, அவள் மீது சந்தேகப்பட்டு அடித்தான். அதன் பின்னர், வருத்தத்துடன் அருகிலுள்ள மண்டபத்துக்கு போய்ப் படுத்தான்.
அப்போது அந்த மண்டபத்துக்கு ஒவ்வொரு வீட்டிலும் அணைக்கப்பட்ட தீபங்கள் வந்து சேர்ந்தன. கடைசியாக ஒரு தீபம் வந்தது.
கடைசி தீபம் மற்றவைகளிடம், இதோ! படுத்திருக்கிறானே! இவன் தேவையில்லாமல் மனைவியை சந்தேகப்பட்டவன், என்று நடந்த கதையைச் சொன்னது.
அவன் உண்மையை உணர்ந்தான். மனைவியிடம் மன்னிப்புக் கேட்டு, அந்தப் பாட்டையும், பொருளையும் கேட்டான்.
அவை அவளை விட்டு வெளியேறிச் செருப்பாகவும், சட்டையாகவும் மாறிவிட்டதால் அவளுக்கும் மறந்து விட்டது.
புரிந்து கொண்டீர்களா! பயனுள்ள விஷயங்களை உடனுக்குடன் பிறருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். இல்லையென்றால், அவை ஒருவருக்கும் பயனில்லாமல் போய்விடும்.