ஒரு ஏழை, பொருட்செல்வம் வேண்டி இறைவனை நினைத்துத் தவமிருந்தான். அவன் முன் இறைவன் தோன்றி, ‘என்ன வரம் வேண்டும்?’ என்றார்.
‘எனக்குப் பணக்காரனாவதற்குப் பணம் வேண்டும்’ என்றான்.
இறைவனோ, ‘சரி... இதை வைத்துக்கொள்’ என்று ஒரு தடிக்கம்பைக் கொடுத்தார்.
அதற்கு அந்த ஏழை, ‘நான் பணம் கேட்டால் தடியைத் தருகிறீர்களே?’ என்றான்.
‘இந்தத் தடியை உனக்கு பணம் தேவைப்படும் போதெல்லாம் தட்டினால், ஆயிரம் தங்கக் காசுகள் கிடைக்கும். நீ எப்பொழுது பணம் வேண்டும் என்று நினைக்கிறாயே, அப்பொழுதெல்லாம் இந்தத் தடியைத் தட்டினால் ஒவ்வொரு முறையும் ஆயிரம் பொற்காசுகள் உனக்குக் கிடைக்கும்’ என்றார் இறைவன்.
ஏழை மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருக்கும் போதே, ‘ஆனால் ஒரு நிபந்தனை’ என்றார் இறைவன்.
ஏழை என்ன ஏதென்று தெரியாமல் விழித்தான்.
இறைவன் தொடர்ந்தார். ‘உனக்குக் கோபம் வரக்கூடாது. அப்படி வந்தால், தடி உன்னைவிட்டுப் போய்விடும். கோபம் மட்டுமில்லாமல் இருந்தால், இந்தத் தடி எப்பொழுதும் உன்னிடமே இருக்கும்’ என்று சொல்லி மறைந்துவிட்டார்.
ஏழை ஒரு முறை தடியைத் தட்டினான். ஆயிரம் தங்கக்காசுகள் கிடைத்தன. அதை அள்ளி மூட்டையாகக் கட்டிக்கொண்டு, வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தான். வழியில் அவனுக்கு எதிரே ஒரு சன்னியாசி வந்து கொண்டிருந்தார். அவர் ஏழையிடம், ‘ஏனப்பா... எங்கே போய் வருகிறாய்?’ என்று கேட்டார்.
நடந்ததைச் சொல்லித் தங்கக் காசைக் காட்டினான். ‘அப்படின்னா இப்ப அந்தத் தடியைத் தட்டு பார்க்கலாம்?’ என்றார்.
உடனே ‘இதோ பாருங்கள் தட்டுகிறேன்’ என்று தட்டினான். அதிலிருந்து ஆயிரம் பொற்காசுகள் விழுந்தன.
அதையும் அந்த ஏழை எடுத்துக் கொண்டான். அதைப் பார்த்த சன்னியாசி, ‘இதேபோல் எப்பவும் வருமா?’ என்றார். ‘நாளைக்குத் தட்டினால் கூடவா?’ ஏழை ‘ஆமாம்’ என்றான்.
‘இன்னும் ஒருமாதம் கழித்துத் தட்டினால் கூடவா?’ என்று மீண்டும் கேட்டார் அந்தச் சன்னியாசி. ‘ஆமாம்’ என்றான்.
‘ஒரு வருடம் கழித்துத் தட்டினால் கூடவா?’ என்றார். ஆமாய்யா.. போய்யா சும்மா உயிரை எடுக்காதே’ என்று கோபத்தில் பேசினான், அந்த ஏழை.
அவன் அப்படிக் கோபப்பட்ட அந்த நொடியே, பொற்காசுகளும், தடியும் மறைந்து விட்டது.
சோதிக்க வந்தது இறைவன் என்பதைத் தாங்கள் தெரிந்து கொண்டிருப்பீர்கள்தானே...?