ஊரின் ஒதுக்குப்புறத்தில் குடில் அமைத்து தங்கியிருந்தார் ஒரு துறவி. அவரைப் பார்க்கப் பலர் வருவார்கள். தங்கள் மனக் கவலையைப் போக்கும் அந்தத் துறவிக்கு, தட்சணையாகச் சில பொருட்களையோ, பணமோ வழங்கிவிட்டுச் செல்வார்கள். துறவி தன்னுடைய பணிகள் முடிந்ததும், இரவு நேரங்களில் விளக்கொளியில் அமர்ந்து, சிறந்த ஞான நூல்களை வாசிப்பார். அந்த நூல்களில் கூறியிருக்கும் உண்மை நிலையை ஆராய்ந்து பார்ப்பதே அவரது வாடிக்கையாக இருந்தது.
ஒரு நாள் இரவு, அவர் நூல்களை வாசித்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த குடிலுக்குள் ஒரு திருடன் நுழைந்தான். சப்தம் வராத அளவுக்கு அவன் மிக எச்சரிக்கையாக இருந்தும் கூட, அவனது கால் பட்டுக் குடிலுக்குள் இருந்த ஒரு பொருள் உருண்டு சப்தத்தை உண்டாக்கியது.
சப்தம் கேட்டுத் திரும்பிய துறவி, ‘ஓசை எழுப்பாதே! நூலின் மீதான என் கவனம் சிதறுகிறது’ என்று சொல்லி விட்டு, மீண்டும் நூலைப் படிப்பதில் கவனம் செலுத்தினார். துறவியின் அந்த வார்த்தையைக் கேட்டு பயந்து போன திருடன், தான் இடுப்பில் வைத்திருந்த கூரான கத்தியை எடுத்தான். அப்போது துறவி அவனைப் பார்க்காமலேயே, ‘உனக்கென்ன வேண்டும்? பணமா? அது அந்த இழுப்பறையில் இருக்கிறது, எடுத்துக்கொள்!’ என்று இழுப்பறை இருந்த திசையை நோக்கிக் கையைக் காட்டினார்.
சற்றே திகைப்பில் ஆழ்ந்தாலும், கையில் கத்தியைப் பிடித்தபடியேச் சுதாரிப்புடன், இழுப்பறை இருந்த திசைக்கு நகர்ந்தான் திருடன். பின்னர் அந்த இழுப்பறையில் தன் கையை வைத்தான். அப்போதும் அந்தத் துறவி தலை நிமிராமல், ‘மெதுவாக இழு. இழுப்பறை விழுந்து விடப் போகிறது’ என்று கூறியபடி, மீண்டும் நூலை ஆராயத் தொடங்கினார். திருடனுக்கு மேலும் திகைப்பு. மர இழுப்பறையை இழுத்தான். அப்போது துறவி மீண்டும் பேசினார்.
‘நாளை அரசக் காவலர்கள் வருவார்கள். அவர்களுக்கு வரி செலுத்த வேண்டும். வரியைச் செலுத்தாமல் இருப்பது நல்ல குடிமகனுக்கு அழகல்ல. எனவே அதற்கு மட்டும் கொஞ்சம் பணத்தை வைத்து விட்டு, மீதம் இருக்கும் அனைத்தையும் எடுத்துக் கொள்!’ என்றார். திருட வந்தவனுக்கு கைகால் உதறியது. அந்தத் துறவி சொன்னது போலவே கொஞ்சம் பணத்தை வைத்து விட்டு மீதமிருந்த பணத்தை எடுத்துக்கொண்டான். பின்னர் வாசலை நோக்கி நகர்ந்தான். துறவி கூறினார். ‘கொடுத்தவனுக்கு நன்றி சொல்வதுதான் நல்ல பழக்கம். நன்றியில்தான் நல்ல விஷயங்களே ஆரம்பமாகின்றன’. இப்போதும் அந்தத் திருடனை அவர் ஏறெடுத்தும் பார்க்கவில்லை.
திருடன் வாய் குளறியபடியே, ‘நன்றி’ என்று சொல்லி விட்டு, வேகமாகச் செல்ல முயன்றான். ‘கதவை சாத்திக் கொண்டு போ. இல்லையெனில் காற்றில் விளக்கு அணைந்து விடும்’ என்றார் துறவி. துறவி கூறியபடியே குடிலின் கதவைச் சாத்திக் கொண்டு, விட்டால் போதும் என்பது போல் வேகமாக ஓட்டம் பிடித்தான். சில நாட்கள் கழித்து அந்தத் திருடன், அரச காவலர்களிடம் பிடிபட்டான். அவன் எங்கெல்லாம் திருடினான் என்ற உண்மையைக் காவலர்களிடம் ஒப்புக் கொண்டான். சாட்சியம் சொல்லக் காவலர்கள், துறவியையும் அழைத்தனர்.
அரசவைக்கு வந்த துறவி, ‘என்னை எதற்காக அழைத்தீர்கள்?. இவன் எனக்கு எந்தத் தீமையும் செய்யவில்லையே. இவன் அப்போது கஷ்டத்தின் பிடியில் இருந்தான். அவனுக்குப் பணம் தேவையாக இருந்ததால், நான்தான் அவனுக்கு பணம் கொடுத்து உதவி செய்தேன். என்னிடம் பணம் பெற்றுக்கொண்டு, அதற்கு நன்றி சொல்லிவிட்டுக் கதவையும் சாத்திக் கொண்டுதான் சென்றான். இதுபற்றி அவனையேக் கேளுங்கள்’ என்று காவலர்களிடம் கூறினார். மேலும் அந்தத் திருடனை நோக்கி, ‘நான் சொல்வது உண்மைதானே?’ என்று கேட்டார்.
திருடனின் கண்களில் தாரைதாரையாகக் கண்ணீர் வழிந்தது. அது அவன் மனம் திருந்தி விட்டதை வெளிப்படுத்தியது. குற்றத்திற்கான தண்டனையை அனுபவித்து வெளியில் வந்த திருடன், துறவியிடமேச் சென்று சீடனாகச் சேர்ந்தான்.
சந்தர்ப்பம் ஒருவனை குற்றவாளியாக மாற்றலாம். ஆனால் அவர்கள் மனம் மாறச் சந்தர்ப்பங்கள் அளிக்கப்பட வேண்டும். அதிகாரமும், சட்டமும் செய்ய முடியாத மனமாற்றத்தை, அன்பு என்னும் வலிமை மிகு ஆயுதம் நொடியில் செய்து விடும்.