அந்த ஆசிரமத்தின் முன்னும், பின்னும் இருந்த மரங்களில் இருந்து விழுந்த இலைகள் சருகுகளாகவும், குப்பைகளாகவும் மாறியிருந்தன.
மடத்தின் சீடன் ஒருவன், அந்த குப்பைகளையெல்லாம் பெருக்கி, ஒரு மூலையில் ஒதுக்கி குவித்தான்.
அப்போது மடாலயத்தின் குரு அங்கு வந்தார். சீடனைப் பார்த்து, ‘இந்த அதிகாலையில் என்ன செய்து கொண்டிருக்கிறாய்?’ என்றார்.
சீடனோ, ‘சுத்தம் செய்து கொண்டிருக்கிறேன் சுவாமி’ என்றான்.
‘எதை?’ என்றார் குரு.
‘எதை எதையெல்லாம் சுத்தம் செய்ய முடியுமோ, அதையெல்லாம்’ என்றார் சீடன்.
அத்தோடு அவர்களது உரையாடல் நிற்கவில்லை. சீடனைத் தொடர்ந்து குரு கேட்டார், ‘எதுவரை?’.
அதற்கு சீடன், ‘எட்டிய மட்டில்’ என்றான்.
‘சரி.. புத்தருக்கு முன்பா?... புத்தருக்கு பின்பா?’ என்றார் குரு.
சீடன், ‘இரண்டுக்கும் நடுவில்’ என்றான்.
குருவும் ‘மிகவும் சரி..’ என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்று விட்டார்.
இப்படி புதிரான கேள்விகளைக் கேட்டு பதில் பெறுவது, ஜென் குருமார்களின் இயல்பு. புதிதாக இந்த உரையாடல்களை கேட்பவர்கள்தான் குழம்பிப் போவார்கள்.
மேற்கண்ட உரையாடலைக் கேட்ட ஒருவனும் அப்படித்தான் குழம்பிப் போனான்.
அவன் அப்போது தான் அந்த மடாலயத்தில் புதியதாக இணைந்திருந்தான்.
குழப்பம் மேலிடவே, சுத்தம் செய்து கொண்டிருந்த சீடனை நெருங்கி, ‘நீ குருவிடம் பேசியது எதுவுமே எனக்கு புரியவில்லை. நீ சுத்தம் செய்வதைப் பார்த்து குரு, ‘எதை’ என்கிறார். ‘எதுவரையில்’ என்கிறார். ‘புத்தருக்கு முன்பா, பின்பா?’ என்கிறார். புத்தர் இறந்து பல வருடங்கள் ஆன நிலையில், இது என்ன புதுவிதமான கேள்வி?’ என்றார் அந்தப் புதியவன்.
‘இந்த உலகம் தோட்டம் போன்றது. அதில் தேவையற்ற, மக்கிப்போன குப்பைகளைப் போல் கெட்டதும் நிறைந்திருக்கிறது. அதை தேவையற்றது என்று விட்டு விட முடியுமா? அதைத்தான் ‘சுத்தம் செய்கிறேன்’ என்றேன். எதை, எதைச் சுத்தம் செய்ய முடியுமோ, அதைத்தான் சுத்தம் செய்ய முடியும் என்பதால்தான், ‘எதை எதை முடியுமோ அதை’ என்றேன். அவரவர் சக்திக்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவுதான் இயலும், அதனால்தான் ‘எட்டியமட்டில்’ என்று கூறினேன்’ என்றான் சீடன்.
அந்தப் புதியவன் ‘அதுசரி.. புத்தருக்கு நடுவில் என்றாயே.. அது எப்படி?’ என்றான்.
‘உலகம் நலம் பெற இதற்கு முன்பு எத்தனையோ புத்தர்கள் தோன்றியிருக்கிறார்கள். இப்போதும் புத்தர்கள் இருக்கிறார்கள். இன்னும் புத்தர்கள் தோன்றுவார்கள். அப்படி வரப்போகிறவர்களுக்கு முன்பு, என்றால் இயன்றவரை சுத்தம் செய்கிறேன் என்பதைத்தான் புத்தருக்கு நடுவில் என்றேன்’ என்று விளக்கம் அளித்தான் சீடன்.