ஒரு ஊரில் ஒரு இளைஞன் இருந்தான். அவன் ஒரு பரம ஏழை.அந்த ஊரிலேயே ஒரு பெரும் பணக்காரனும் இருந்தான்.
இளைஞனுக்கும் அந்தப் பணக்காரனைப் போல் தானும் பணக்காரனாக வேண்டும் என்கிற ஆசை வந்தது.
அந்தப் பணக்காரனிடம் சென்று அவனுடைய செல்வம் சேர்த்த விபரத்தைத் தெரிந்து கொண்டு வரவேண்டும் என்கிற எண்ணம் எழுந்தது.
உடனே அவன் அந்தப் பணக்காரன் வீட்டுக்குச் சென்றான்.
அவன் சென்ற நேரம், அந்த பணக்காரன் மிகவும் கோபத்துடன் இருந்தான். அவனுடைய தானியக் கிடங்கில் எலிகள் தொல்லை. நிறைய தானியங்கள் சேதமாகியதுடன் காலியாகியும் இருந்தது. எலியை அடிக்க ஆட்களை ஏவிவிட்டதில் ஒரே ஒரு எலி மட்டும்தான் அடிபட்டது.
அதை அவனிடம் காட்டிவிட்டு வெளியில் போட்டு வைத்தார்கள்.
"என்ன விஷயம்?"
"ஒன்றுமில்லை, ஐயா. நீங்கள் பணக்காரராகிய வழியை எனக்கும் சொல்லித் தரவேண்டும்"
"அதெல்லாம் சொல்லித் தெரியும் விசயமில்லை. அதெல்லாம் அதுவாக வரவேண்டியது. எல்லாம் புத்தி சாதுர்யம்தான். புத்தி சாதுர்யம் மட்டும் இருந்தால், அதோ கிடக்கிறதே, செத்த எலி... அதை வைத்தேப் பெரும் பணக்காரனாகி விடலாம்," என்றான்.
இளைஞனுக்கு ஏதோ பொறி தட்டியது.
உடனே இளைஞன் சொன்னான், "சரி ஐயா. அந்த செத்த எலியை என்னிடம் கொடுங்கள்", என்றான்.
"சரிசரி. எடுத்துட்டுப் போ", என்று பணக்காரன் விரட்டி விட்டான்.
இளைஞன் அந்த எலியை எடுத்துக் கொண்டு செல்லும் போது, ஒரு கடலை மண்டியைத் தாண்டிச் சென்றான். அந்த மண்டியின் உரிமையாளர் ஒரு பூனையை அருமையாக வளர்த்து வந்தான்.
அந்தப் பூனைக்கு அன்று சாப்பாடு ஏதும் வைக்கவில்லை. மறந்து போய்விட்டது. கடும்பசியால் கத்திக் கொண்டிருந்தது. மிகச் செல்லமாக வளர்த்த பூனை.
"தம்பி. அந்த எலியை என்னிடம் கொடுக்கிறாயா?" என்று மண்டிக்காரர் கேட்டார்.
இளைஞனும் அதைக் கொடுத்து விட்டான். பூனையும் மிகவும் சந்தோஷமாக எலியைத் தூக்கிக் கொண்டு போய்விட்டது.
மண்டிக்காரர் அந்த இளைஞனுக்கு பை நிறையக் கடலை கொடுத்தான்.
அதை வாங்கிச் சென்ற இளைஞன் வீட்டில் அந்த கடலையை வறுத்து ஒரு சிறு பானையில் குளிர்ந்த தண்ணீரில் கொஞ்சம் வெட்டிவேரைப் போட்டு எடுத்துக் கொண்டு ஊருக்கு வெளியில் இருந்த மலைப்புறமாகச் சென்றான்.
அங்குதான் அந்த வட்டாரத்து விறகு வெட்டிகள் விறகுகளை வெட்டி விற்பனைக்குக் கொண்டு செல்வார்கள்.
இளைஞன் அங்கு ஒரு மரத்தடியில் கடலையைச் சிறிது சிறிதாகப் பிரித்து வைத்துக் கொண்டு விறகு வெட்டிகளுக்குக் கொடுத்தான். அவர்களும் கடலையைத் தின்றுவிட்டு களைப்பு நீங்க நீரருந்தி விட்டுச் சென்றார்கள்.
அவர்களிடம் காசு எதுவுமில்லை. அவர்கள் வெட்டிய விறகில் சில கட்டைகளை அவனிடம் கொடுத்து விட்டுச் சென்றனர்.
இளைஞன் தன் வீட்டுக்கு வந்த பிறகு, விறகில் ஒரு பகுதியை விற்றுவிட்டு மீதியை அடைந்து வைத்தான். காசுக்குக் கடலை வாங்கினான். அடுத்த நாளும் கடலை வியாபாரம். விசயமறிந்து இன்னும் பலர் வந்து கடலை வாங்கினர்.
சிலநாட்கள் கழித்து கடலையுடன் கட்டுச்சாதமும் எடுத்துச் சென்று அதனையும் விறகுக்குப் பண்டமாற்று செய்தான்.
ஏராளமாகச் சேர்ந்து விட்ட விறகை அடுக்கி வைக்க ஒரு கிடங்கை வாடகைக்குப் பிடித்தான்.
அந்த ஊரிலுள்ள பெரிய விறகுமண்டியில் நெருப்புப் பிடித்துவிட்டது. அனைத்து விறகுகளும் சாம்பலாகின. ஊரில் விறகே இல்லை.
அப்போது இளைஞனிடம் விறகு இருப்பதை அறிந்து அவனிடம் வாங்கினர்.
இதில் அவனுக்குப் பெரும்பணம் கிடைத்தது.
அவனே ஒரு பெரிய விறகுமண்டியும், காட்டின் ஓரத்தில் ஒரு சாப்பாட்டுக் கடையும் வைத்தான். பிறகு கடலை மண்டியையும் விலைக்கு வாங்கிக் கொண்டான்.
சில ஆண்டுகளில் அவன் செய்யக்கூடிய வியாபாரங்களுக்குத் தொடர்புடைய பல தொழில்களையும் ஏற்படுத்திக் கொண்டான்.
ஒருநாள் அந்தப் பழைய செல்வந்தனைப் பார்க்கச் சென்றான்.
ஒரு தங்கத் தாம்பாளத்தில் வைத்து பட்டுத்துணியால் மூடி எடுத்துச் சென்றான்.
அந்த செல்வந்தனிடம் வணக்கமாக நின்று தாம்பாளத்தை நீட்டினான்.
அதை வாங்கி, பட்டுத்துணியை நீக்கியபின் செல்வந்தன் அயர்ந்து போனான்.
அதில் ஒரு எலி இருந்தது.
சாதாரண எலியல்ல. தங்கத்தால் செய்யப்பட்ட எலி அது. அதன் கண்கள் இருக்குமிடத்தில் வைரங்கள் பதிக்கப் பட்டிருந்தன.
இளைஞன் சொன்னான்;
"நீங்கள் கொடுத்த செத்த எலியினால்தான் நானும் ஒரு செல்வந்தன் ஆகினேன்.
புத்தி சாதுர்யம் இருந்தால் செத்த எலியை வைத்தேப் பணக்காரனாகி விடலாம் என்று நீங்கள் சொன்னது என் மனதில் ஆழமாகப் பதிந்து விட்டது. அதை ஒவ்வொரு நாளும் பலதடவை எனக்கு நானே சொல்லிக் கொள்வேன்.
இதற்காகக் கடுமையாக முயற்சியும் செய்தேன். புத்தியைப் பயன்படுத்திச் சாதுர்யமாக ஒவ்வொன்றையும் செய்தேன்.
இப்போது நீங்கள் கொடுத்த அந்த எலியைத் திருப்பித்தரவே வந்தேன். ஏற்றுக் கொண்டு ஆசீர்வதிக்க வேண்டும்"
அந்தப் பணக்காரன் அசந்து போனான்.