புத்தரிடம் ஒரு சீடன் சேர்ந்தான். அவன் எதிலுமே கடும் தீவிரத்தைக் கடைபிடிப்பதை அவர் கவனித்தார். அவனுக்கு நல்லறிவு புகட்ட எண்ணினார்.
ஒருமுறை அவனது அறைக்குள் சென்றார். அங்கே புத்தம் புதிய வீணை ஒன்று இருந்தது.
“சீடனே! இந்த வீணையை இசைக்க ஆசையாக இருக்கிறது. மீட்டட்டுமா!” என்று அவனிடம் புத்தர் கேட்டார்.
“புத்தபிரானேத் தங்கள் கைபட என் வீணை புண்ணியம் செய்திருக்க வேண்டும். தங்கள் திருக்கரங்களால் இசைப்பதைக் கேட்க நானும் ஆவலாய் உள்ளேன்” என்றான் அவன்.
புத்தர் வீணையை எடுத்து நரம்புகளை முறுக்கேற்றினார். ஒரு கட்டத்தில் மேலும் மேலும் திருக, சீடன் அவரிடம், “ஐயனே! இப்படி முறுக்கேற்றினால் நரம்பு அறுந்து விடுமே!” என்று பரபரப்புடன் சொன்னான்.
“அப்படியா!” என்ற புத்தர், நரம்புகளை தளர்த்த ஆரம்பித்தார். அது அளவுக்கதிகமாக தொய்வாகவே, “எம்பிரானே! இப்படிச் செய்தால் வீணையை இசைக்க முடியாதே!” என்றான்.
புத்தர் வீணையைத் தரையில் வைத்தார்.
“சீடனே! நாம் உபயோகிக்கும் ஒவ்வொரு பொருளிலும் வாழ்க்கையின் தத்துவம் புதைந்து கிடக்கிறது. வீணையின் நரம்புகளை அதிகம் இறுக்கினால் அறுந்துபோகும், தளர்த்தினால் ஒலி எழாது. இதுபோல் தான் கடுமையான பயிற்சியால் உடல் தளர்ந்து விடும். அடுத்து வேலை செய்ய முடியாது. குறைவாக உழைத்தாலோ சோம்பலுக்கு இடமளிக்கும். எனவே, நிதானமாக எதையும் செய். சாதித்துக் காட்டுவாய்!” என்றார்.
எந்த ஒரு செயல்பாட்டிலும் அதிதீவீரமாகவோ அல்லது அதிகச் சோம்பலாகவோ இருக்கக் கூடாது.