முனிவர் ஒருவர் மரத்தடியில் அமர்ந்து தம் வேட்டியில் இருந்த கிழிசலைத் தைத்துக்கொண்டு இருந்தார். அவர் ஒரு சிவபக்தர். அப்போது சிவனும், பார்வதியும் வான்வெளியில் வலம் வந்து கொண்டிருந்தனர்.
மரத்தடியில் ஒளிப்பிழம்பாய் அமர்ந்திருந்த முனிவரைக் கண்டதும் உள்ளம் நெகிழ்ந்த அன்னை, சிவபெருமானைப் பார்த்து, "மரத்தடியில் பார்த்தீர்களா?" என்றாள்.
"பார்த்தேன்" என்றார் சிவபெருமான்.
"பார்த்த பிறகு எப்படி வெறுமனே போவது? அவருக்கு ஏதேனும் வரம் கொடுத்துவிட்டுப் போகலாம், வாருங்கள்" என்றாள் அன்னை.
"அவன் அந்த நிலையையெல்லாம் கடந்தவன். இப்போது அவனிடம் செல்வது வீண்வேலை, வேண்டாம் வா... நம் வழியேப் போகலாம்" என்றார் சிவபெருமான்.
ஆனால் பார்வதி விடவில்லை. இறைவனை வற்புறுத்தி மரத்தடிக்கு அழைத்துச் சென்றார்.
"முனிவரே, மேலிருந்து பார்த்தபோது, தாங்கள் இருப்பது தெரிந்தது. உடனேக் கீழிறங்கி வந்துவிட்டோம்" என்று சொல்லி முனிவரை இருவரும் வணங்கினர்.
அவர்களைக் கண்ட முனிவர் மகிழ்ச்சியடைந்தார். பின்னர், தன்னிடமிருந்த மோரை இருவருக்கும் வழங்கிய அவர், மீண்டும் கிழிசலைத் தைக்கத் தொடங்கிவிட்டார்.
சிறிது நேரம் பொறுமையாகக் காத்திருந்துவிட்டு, "சரி, நாங்கள் விடை பெறுகிறோம்" என்றனர் இருவரும்.
"மகிழ்ச்சியாய்ப் போய் வாருங்கள்" என்று சொல்லிவிட்டு மீண்டும் கிழிசலைத் தைக்கத் தொடங்கினார் முனிவர்.
உடன் அன்னை சிவபெருமானிடம் தாங்கள் வந்ததன் காரணத்தைக் குறிப்புக் காட்ட, சிவபெருமானும், "முனிவரே! நாங்கள் ஒருவருக்குக் காட்சி கொடுத்துவிட்டால் வரம் கொடுக்காமல் செல்வதில்லை. எனவே, தாங்கள் ஏதாவது வரம் கேளுங்கள்.கொடுக்கிறோம்" என்றார்.
முனிவர் சிரித்தார். "வரமா? உங்கள் தரிசனமே எனக்குப் போதும். வரம் எதுவும் வேண்டாம். உங்கள் வழியைத் தொடருங்கள்" என்று சொல்லிவிட்டுப் பணியில் ஆழ்ந்தார்.
அதனைக் கண்ட இருவரும் அவரை விடவில்லை. "ஏதாவது வரம் கொடுக்காமல் செல்லமாட்டோம்" என்று பிடிவாதமாய் நின்றனர்.
முனிவர் வேறு வழியின்றி ஒரு வரம் கேட்டார்.
"நான் தைக்கும்போது இந்த ஊசிக்குப் பின்னாலேயே நூல் போகவேண்டும், அது போதும்" என்றார்.
அதைக் கேட்ட இருவரும் திகைத்தனர்.
"ஏற்கனவே ஊசிக்குப் பின்னால்தான் நூல் போகிறதே. இதற்கு நாங்கள் ஏன் வரம் தரவேண்டும்?"என்று அன்னை பணிவாய்க் கேட்டார்.
"அதைத்தான் நானும் கேட்கிறேன். நான் ஒழுங்கு தவறாமல் நடந்து கொண்டு வந்தால் வரவேண்டிய பலன் நியதிப்படி தானாகப் பின்னால் வருமே. இடையில் நீங்கள் எதற்காக எனக்கு வரம் தரவேண்டும்?"என்று கேட்டார் முனிவர்.
முனிவரின் விளக்கத்தைக் கேட்ட இருவரும் சிரித்துவிட்டு சென்றனர்.
தூய்மையான இறை நம்பிக்கை கொண்டவர்களுக்கு, நாம் சரியாக நடந்து கொண்டால், நமக்குரிய விளைவும் சரியாக இருக்கும் என்ற மனத்தெளிவு பிறக்கிறது. இறை நம்பிக்கை இல்லாதவர்களும் சரியாக நடந்து கொண்டால் அதன் விளைவுகளும் சரியாக இருக்கும் என்பது மற்றொரு கருத்தாகும்.