கோயில் வாசலில் உள்ள பெட்டிக்கடையில் பக்தியுடன் அமர்ந்திருப்பார் ஒருவர்.
அவர், “எனக்கு ஆசையே இல்லை. பந்தங்களில் இருந்து விடுபட நினைக்கிறேன். ஆனால், இன்னும் அதற்கான வேளை வரவில்லை!” என்றபடியே இருப்பார்.
ஒருநாள்! கோயிலுக்கு வந்த சந்நியாசியிடமும் அதையேச் சொல்லிப் புலம்பினார் அந்தப் பெட்டிக்கடைக்காரர்.
அதைக் கேட்டதும், ''நீ சரி என்று சொன்னால், இப்போதே உன்னை அழைத்துக் கொண்டு செல்கிறேன். நீ என்ன சொல்கிறாய்?'' என்று கேட்டார் சந்நியாசி.
''நானும் இதைத்தான் நினைச்சேன். ஆனால், வீட்ல விவரம் தெரியாத வயசுல புள்ளைங்க இருக்கிற போது, நான் எப்படி வீட்டை விட்டுட்டுப் போறதுன்னு ஒரு யோசனை. அவர்களுக்குக் கல்யாணம் காட்சின்னு ஆயிட்டா... அப்புறம் நிம்மதியாகக் கிளம்பிடலாம்!'' என்றார் அவர்.
அதைக் கேட்டுச் சிரித்தபடியே கிளம்பிச் சென்றார் சந்நியாசி.
சில ஆண்டுகள் கடந்தன.
ஒரு நாள்... அந்தக் கோயிலுக்குத் திரும்ப வந்தார் அந்த சந்நியாசி.
அந்தப் பெட்டிக்கடைக்காரர் சந்நியாசியிடம், ''எனக்கு ஆசையே இல்லை. பந்தங்களிலிருந்து விடுபட விரும்புகிறேன். ஆனால், இன்னும் அதற்கான வேளை வரலை'' என்று பழையபடியே புலம்பினார்.
சந்நியாசி சிரித்தபடி, ''சரி... இப்போதாவது என்னுடன் வந்துவிடு'' என்றார்.
''என் பிள்ளைகளுக்குக் கல்யாணம் பண்ணி வச்சுட்டேன். பேரப்பிள்ளைங்களையும் கண்ணாலேப் பார்த்துட்டா. என் கவலையெல்லாம் தீர்ந்துவிடும்'' என்று சொன்னார் அந்தப் பெட்டிக்கடைக்காரர்.
அதன் பிறகு, சில ஆண்டுகளுக்குப் பிறகு, அதே சந்நியாசி வந்தார்.
''எனக்கு ஆசையே இல்லை...'' வழக்கம்போல் அந்தப் பெட்டிக்கடைக்காரரின் குரல்.
''இப்போதாவது என்னுடன் வருகிறாயா?'' என்று கேட்டார் சந்நியாசி.
''நீதிமன்றத்திலே சில வழக்குகள் இருக்கு. அந்த வழக்குகள் முடிஞ்சிட்டா வந்துடலாம்” என்று பதில் சொன்னார் அந்தப் பெட்டிக்கடைக்காரர்.
வழக்கமான புன்னகையுடன் அங்கிருந்து கிளம்பினார் சந்நியாசி.
ஆண்டுகள் பல கழிந்தன. மீண்டும் வந்தார் சந்நியாசி. ஆனால், அந்தப் பெட்டிக்கடைக்காரரைக் காணவில்லை.
அந்தப் பெட்டிக்கடையில் இருந்தவரிடம் பெரியவர் குறித்து விசாரித்தார் சந்நியாசி.
கடையில் இருந்தவர், ''சுவாமி... நீங்க கேட்கிறது எங்க அப்பாவைத்தான். அவரு 'எல்லா பந்தங்களையும் விட்டுட்டு உங்ககூட வந்துடணும்னு சொல்லிகிட்டே இருந்தாரு, போன வருஷம் ஒருநாள்... நெஞ்சு வலின்னு சொன்னவரு, திடீரென்று இறந்து போயிட்டாரு. அப்பா, இந்நேரம் உயிரோட இருந்திருந்தால், நிச்சயம் உங்களுடன் வந்திருப்பார் சாமீ...'' என்று கவலையுடன் சொன்னார் பெட்டிக்கடைக்காரரின் மகன்.
அதைக் கேட்ட சந்நியாசி, ''உங்க அப்பா எங்கேயும் போய்விடவில்லை. இங்கதான் இருக்கார். அதோ... அங்கே பார்... அதென்ன?''
''அது நாய்... இங்கேதான் சுத்திக்கிட்டிருக்கு!''
''அதான் உங்க அப்பா. இப்பப் பாரு'' என்றவர், கையைத் தட்டினார்.
அந்த நாய் வாலாட்டியபடியே ஓடி வந்தது. நாயின் தலையைத் தட்டினார்.
உடனே அது, ''எனக்கு ஆசையே இல்லே...'' என பேசத் தொடங்கியது.
''இப்போதாவது என்னுடன் வந்துவிடு...'' என்றார் சந்நியாசி.
''சாமி! ஏராளமாச் சொத்து சேர்த்து வச்சுட்டேன். பிள்ளைங்க அதைச் சரியாக் காப்பாத்துவாங்கன்னு தோணலீங்க... கடையைச் சரியாப் பூட்டாமலேப் போயிடறாங்க. அதுதான் நாயாப் பிறந்து காவல் காத்துக்கிட்டு இருக்கிறேன்'' என்று அந்த நாய் சொன்னதும், 'கடகட'வெனச் சிரித்தார் சந்நியாசி.
பிறகு அவர் சொன்னார், ''அறியாமையில் சுகம் கண்டவர்களுக்கு ஆன்ம விடுதலை எப்படிக் கிடைக்கும்?''