திருவண்ணாமலை மலைப்பாதையின் மேல் குருவும் சிஷ்யனும் நடந்து கொண்டிருந்தார்கள். அங்கே இருக்கும் விருப்பாச்சி குகையில் தியானம் செய்ய இருவரும் நடக்கத் தொடங்கி அரை மணி நேரம் கடந்துவிட்டது.
குரு மெளனமாக பின்னால் வர சிஷ்யன் வேகமாக நடந்து கொண்டிருந்தான்.
சிறிது நேரத்தில் குருவின் காட்சியில் மறைந்து வெகு தொலைவுக்குச் சென்று விட்டான்.
குரு மெல்ல நடந்து கொண்டிருந்தார்.
சில நிமிடங்கள் கரைந்தன... தூரத்தில் சோர்வுடன் சிஷ்யன் அமர்ந்திருந்தான்.
குரு கையில் ஒர் பச்சிலையுடன் நடந்து வந்தார்.
சிஷ்யனிடம் கொடுத்து முகர்ந்து பார்க்க சொன்னார்.
அவர் அந்தப் பச்சிலையை முகர்ந்ததும் அதில் எலுமிச்சை மணம் அடித்தது.
சிஷ்யனின் மனதுக்கும் உடலுக்கும் ஒரு உற்சாகம் கிடைத்தது.
“குருவே இது என்ன இலை?”
“இதன் பெயர் எலும்மிச்சைப் புல். சாதாரண புல் போலத் தெரிந்தாலும் எலுமிச்சை மணம் கொண்டது”
“குருவே உங்களிடம் ஒரு கேள்வி. தவறாக எடுத்துக் கொள்ளக்கூடாது”
புன்னகைத்தவாறே...“ம்...” என்றார் குரு.
”ஒருவனுக்கு ஆன்மீக உயர்வு அடைய குரு அவசியம்தானா?”
”விழிப்புணர்வு ஒருவனுக்குக் கிடைக்கும் வரை அவனுக்கு குரு அவசியம்”
“விழிப்புணர்வு என்றால்...?”
“நான் கொடுத்த எலுமிச்சைப் புல் நுகர்ந்தாய் அல்லவா? அதற்கு முன் இங்கே இருக்கும் எலுமிச்சைப் புல் பற்றி உனக்குத் தெரியுமா?”
“தெரியாது”
“நான் வரும் வரை இங்கே அமர்ந்திருதாயே... பார் உன் கால்களுக்கு அருகிலேயெ அந்தப் புல் புதர் போல வளர்ந்திருக்கிறது. உன் கால்களுக்குக் கீழே அந்தப் பொருள் இருப்பது தெரியாமல், இன்னொருவர் உனக்குத் தரும் வரை நீ அமர்ந்திருக்கிறாய். விழிப்புணர்வு கொண்டவனாக இருந்தால் உனக்கேத் தெரிந்திருக்கும்”
“அப்படியானால் விழிப்புணர்வு வரும் வரை குரு தேவை அல்லவா?”
“விழிப்புணர்வு வரும் வரை குரு தேவை. விழிப்புணர்வு வந்த பின் குரு எல்லா இடத்திலும் இருப்பதை நீ உணர்வாய்”
”அப்படியானால் அனைவருக்கும் குரு தேவையா?”
“ஆம். அதனால்தான் ஆண்டாண்டு காலமாக இம்மலையில் எலும்மிச்சைப் புல் வளருகிறது. உன்னையும் என்னையும் போலப் பலர் இங்கே வந்து இதேக் கேள்வியையும் பதிலையும் விவரிக்கிறார்கள்”