ஜென் துறவி, அவரது சீடன் ஒருவன் தோட்டத்தைச் சுத்தம் செய்வதைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
அவன் அதிக நேரமாக ஒரே வேலையைச் செய்தும் சுத்தம் இல்லாமல் இருந்தது.
ஜென் துறவி அவனை அருகில் அழைத்து ஒரு கதையைக் கூறினார்.
அது, "ஒரு முறை ஓர் சிறந்த ஓவியன் அவருடைய திறமையை முன்வைத்து ஒரு ஓவியத்தை வரைந்து, பின் அவருடைய சக நண்பரிடம் "எப்படி இருக்கிறது?" என்று கேட்டார்.
நண்பரும் "இது நன்றாக இல்லை" என்று கூறினார்.
மீண்டும் மீண்டும் அந்த ஓவியர் வரைந்தவற்றை சரி செய்ய, நண்பரோ நன்றாக இல்லை என்று சொல்லிக் கொண்டு இருந்தார்.
அதனால், அந்த ஓவியர் தன் நண்பரிடம், "நீ போய் எனக்குக் கொஞ்சம் தண்ணீர் கொண்டு வா!" என்று நண்பரை அனுப்பி விட்டு, பின்பு அவர் ஓவியத்தில் முழுக் கவனம் செலுத்தி ஓவியத்தை வரைந்தார்.
தண்ணீர் கொண்டு திரும்பிய நண்பர், அந்த ஓவியத்தைக் கண்டு ஆச்சரியத்துடன் "படு சூப்பர்" என்று சொல்லி, அவரைப் பாராட்டினார்.
எனவே, "எந்த ஒரு செயலையும் நாம் நம் முழுக் கவனத்துடன் செய்வதால் வெற்றி நிச்சயம். அதைவிட்டு அந்தச் செயலை பிறர் பார்க்கின்றனரே என்கிற பயத்துடன் செய்தால், அது ஒரு முழுமையைத் தராது" என்று அந்தச் சீடனுக்கு இந்தக் கதையின் மூலம் உணர்த்தினார்.