ஒரு முறை ஹகுயன் என்கின்ற ஜென் துறவி அவரது சிஷ்யர்களிடம், "ஒருவன் கடினமான செயல்களைச் சுலபமாக செய்வது எப்படி?" என்பதைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்.
அதனை விளக்குவதற்காக ஒரு கதையை கூறினார்.
அது என்னவென்றால்,
"ஒரு திருடனின் மகன், அவன் தந்தையிடம் தனக்கும் திருடுவதில் உள்ள ரகசியங்களைக் கற்று தரும்படிக் கேட்டான். அவனுடைய தந்தையும் அதற்கு ஒப்புக்கொண்டு அன்று இரவு ஒரு பெரிய மாளிகைக்குத் திருடுவதற்காக அவனை அழைத்துச் சென்றான். அந்த வீட்டில் குடும்பத்தினர் அனைவரும் உறங்கி கொண்டிருக்கையில், திருடன் அவன் மகனைத் துணிகள் நிறைந்த அறைக்குள் அழைத்துச் சென்றான். மகனிடம் அங்குள்ள துணிகளைத் திருடச் சொன்னான்.
அவனுடைய மகனும் தந்தையின் சொற்படி அங்கிருந்த துணிகளை எடுத்துக் கொண்டிருந்தான். அப்போது அந்தச் சிறுவனின் தந்தை மெதுவாக அறையின் வெளியே வந்து, பின் அவனை உள்ளே வைத்துப் பூட்டினான்.
பின்பு வீட்டில் உள்ளோரை எழுப்புவதற்காக, அந்த வீட்டின் வெளிப்புறம் வந்து கதவைத் தட்டிவிட்டு, வேகமாகத் தப்பி வீட்டிற்கு ஓடிவிட்டான்.
சிறிது நேரம் கழித்து, அவனது மகனும் வீடு திரும்பினான்.
பிறகு அழுது கொண்டே அவனுடைய தந்தையிடம், "அப்பா ஏன் அப்படிச் செய்தீர்கள்? நான் எதையும் திருடவில்லை, தப்பிப்பதற்கு என்ன வழி? என்று என் புத்திக் கூர்மையைச் செயல்படுத்துவதிலேயே நேரம் அனைத்தும் போயிற்று" என்று கதறி அழுதான்.
அவனது தந்தையும் சிரித்து கொண்டே, "மகனே, நீ கொள்ளைக்கலையில் முதல் பாடத்தைக் கற்று கொண்டாய்" என்று கூறினான்.
இந்தக் கதையினைச் சொல்லி முடித்த ஜென் துறவி, சிஷ்யர்களிடம் இதைத்தான் மடிவது அல்லது நீந்துவது என்ற முறை என்பர். மேலும் "பயம் கொண்ட நிலையில், எவரொருவரும் செய்ய முடியாத காரியங்களையும் அவர்கள் தங்கள் வலிமை கொண்டு செய்து முடிப்பர். ஒருவரின் சொந்த அனுபவத்தினால் மட்டுமே எந்த ஒரு கடினமான செயலையும் எளிதில் செய்யக் கற்று கொள்ள முடியும் என்பது சாத்தியம்" என்று சொல்லி உணர்த்தினார்.