ஆழ்வார்களில் ஒருவரான பொய்கையாழ்வார் ஒருநாள் திருக்கோவிலூருக்குச் சென்றார்.
அப்போது ஒரு வைணவரின் வீட்டிற்குச் சென்றார். இறைவனைத் தரிசிக்கும் நோக்கத்தில் அவர் வந்திருந்தார்.
அந்த வைணவர் அவரை உபசரித்துத் தன் வீட்டு இடைகழியில் அவரைத் தங்க வைத்தார்.
பகல் முடிந்து இரவு வந்தது. புயலும் மழையும் ஆரம்பித்தது.
அப்போது பொய்கையாழ்வார் படுத்திருந்த வீட்டின் கதவை ஒருவர் தட்டினார்.
கதவைத் திறந்து பார்த்தபோது பூதத்தாழ்வார் அங்கே வந்திருந்தார்.
“இந்த வீட்டில் தங்குவதற்கு இடம் கிடைக்குமா?” என்று கேட்டார்.
“இங்கு ஒருவர் கிடக்கலாம், இருவர் இருக்கலாம்” என்று விடை கொடுத்த பொய்கையார் அவரை உள்ளே வரவேற்று இடம் கொடுத்தார்.
ஒருவர் படுத்திருந்த இடத்தில் இப்போது இரண்டுபேர் அமர்ந்து கொண்டனர்.
மழையும் காற்றும் வலுத்தது, அப்போது மூன்றாவதாக பேயாழ்வார் அங்கே வந்து “தங்குவதற்கு இடம் இருக்குமா?” என்று கேட்டார்.
உடனே பொய்கையாழ்வார், “இங்கே உள்ள இடத்தில் ஒருவர் படுக்கலாம், இருவர் இருக்கலாம் மூவர் நிற்கலாம். ஆகவே உள்ளே வாருங்கள்” என்று வரவேற்றார்.
பிறகு அந்த ஆழ்வார்கள் மூன்றுபேரும் அந்த இடைகழியிலேயே நின்று கொண்டு பகவானின் பெருமைகளைப் பேசிக் கொண்டிருந்தனர்.
தன் அடியார்கள் மூவரும் ஒருங்கே இணைந்து தன்னைப் பற்றி பேசி ஆனந்தப்படுவதைப் பார்த்த பகவான் தானும் அவர்களுக்கு நடுவே நின்று அதை அனுபவிக்க ஆசை கொண்டான்.
ஆகவே அங்கே வந்து மூன்று பேருக்கும் இடையில் நின்று கொண்டு அந்த இடைகழியில் இடநெருக்கடியே உண்டாக்கினான்.
பக்தியின் உச்சியில் நின்ற மூன்று ஆழ்வார்களும் தங்களுக்கு இடநெருக்கடியை ஏற்படுத்துவது யார் என்பதை அறிய முயன்றனர்.
“வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்யகதிரோன் விளக்காக - செய்ய
கடராழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை
இடராழி நீங்குகவே”
என்று முதல் பாசுரத்தைப் பாடினார் பொய்கையாழ்வார்.
“அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக இன்புருகு சிந்தை இடுதிரியா - நன்புருகி ஞானச் சுடர் விளக்கேற்றினேன் நாரணர்க்கு ஞானத் தமிழ்ப் புரிந்த நான்”
இதற்கு அடுத்தபடியாக என்ற பாசுரத்தைப் பாடி பூதத்தாழ்வார் ஞானச்சுடர் விளக்கை ஏற்றினார்.
இவர்கள் இருவரும் ஏற்றிய ஞானச்சுடரின் வெளிச்சத்தில் தங்களுடன் நெருக்கிக் கொண்டு நிற்கின்ற இறைவனை பேயாழ்வார்,
“திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும்
அருக்கன் அணிநிறமும் கண்டேன் - செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன், புரிசங்கங் கைகண்டேன்
என்னாழி வண்ணன்பால் இங்கு “
என்று தான் நேரில் பார்த்துப் பாடினார்.
இப்படித்தான் வைணவத்தின் ஒப்பற்ற இலக்கியமாக, தமிழ்மறையாக விளங்கும் நாலாயிர திவ்யப் பிரபந்தம் தோன்றியது.
அடுத்தவர்களுக்கு விட்டுக் கொடுப்பவர்களை ஆண்டவனே நேசிக்கிறான், அவன் அவர்களுடன் வந்து இருக்கவும், கலந்துகொள்ளவும் ஆசைப்படுகிறான்.
ஆழ்வார்கள் மிகச் சிறிய இடத்தை விட்டுக் கொடுத்து, பகவான் நெஞ்சில் நீங்காத இடத்தைப் பெற்றுவிட்டனர். மேலும் வைணவ உலகில் மிகப்பெரிய இடத்தை தங்களுக்குச் சொந்தமாக்கிக் கொண்டனர்.
எனவே முன்னேற விரும்புவோரும், வாழ்க்கையில் மற்றவர்களால் புகழப்பட வேண்டுமென்று விரும்புவோரும் விட்டுக் கொடுத்து வாழ்வதைப் பழகிக் கொள்ள வேண்டும்.