ஒரு துறவியிடம் அரசன், “நான் கோவில்களில் திருப்பணி செய்துள்ளேன். தினமும் அன்னதானம் செய்கிறேன். மக்களுக்கு இலவச விடுதிகள் கட்டியுள்ளேன்” என்று நீட்டிக் கொண்டேப் போனான்.
துறவி “அப்படியா!” என்று தலையாட்டி விட்டு அமைதி காத்தார்.
அரசனுக்கு என்னவோ போலாகி விட்டது. அவர் தன்னைப் பாராட்டுவார் என்று நினைத்திருந்த அரசனுக்கு ஏமாற்றம் ஏற்பட்டது.
இருந்தாலும் விடாமல், ''துறவியே! இவ்வளவு சேவை செய்த எனக்குச் சொர்க்கம் நிச்சயம்தானே!” என்றான் அந்த அரசன்.
“இல்லை” என்றார் துறவி.
அதிர்ச்சியுடன் 'ஏன்?' என்றான் அரசன்.
“எதைச் செய்தாலும் 'நான்'தான் செய்தேன் என்ற ஆணவம் கூடாது. அது புண்ணியத்தைத் தடுத்து, பாவச்சேற்றில் ஒருவனைத் தள்ளிவிடும். எனவே, உனக்குச் சொர்க்கம் கிடைக்க வாய்ப்பில்லை, இதைத்தான், வலது கை கொடுப்பது இடதுகைக்குத் தெரியக்கூடாது என்று சொல்கிறார்கள்” என்றார்.
அதன் பிறகு அந்த அரசன், எந்த நற்செயல் செய்தாலும், அதைச் சொல்லிக் கொள்வதேயில்லை.