ஒரு ரிஷி யமலோகத்தைச் சுற்றிப் பார்க்க ஆசைபட்டார். எமதர்மன் அவரது ஆசைக்குச் செவி சாய்த்து, ‘ஐயா நான் தங்களுடன் சித்திரகுப்தனை அனுப்புகிறேன்’ என்றார்.
பின் சித்திரக்குப்தனை எமதர்மன், ரிஷியுடன் செல்லப் பணித்தார். சித்திரக்குப்தன் எமன் ஆணைக்கு இணங்க ரிஷியுடன் சென்றார். எமலோகம் விசித்திர லோகம். அங்கே நடக்கும் ஒவ்வொரு காரியத்துக்கும் உண்டான காரணம், பாகுபாடற்ற, பாரபட்சமற்ற நீதி, நிலைநிறுத்தப்படும் தர்மம் என்று ஒவ்வொன்றாக அத்தனையும் பார்க்கப் பார்க்க, அந்த ரிஷி ஆடிப் போனார். தண்டனைகளுக்கானக் காரணங்களில் அத்தனை துல்லியம். ‘இப்படி நரகம் என்று ஒன்று இருப்பது தெரிந்தும், தண்டனை கிடைக்கும் என்பதை அறிந்தும் ஏன் இந்த மனிதர்கள் பாவங்களைச் செய்கிறார்கள்?’ நினைக்க நினைக்க அவருக்கு ஆச்சர்யமாக இருந்தது.
மனிதர்கள் தங்கள் பாவங்களுக்காக அனுபவிக்கும் கொடூரத் தண்டனைகள் அவரைச் சஞ்சலம் கொள்ள வைக்கவில்லை. பந்த பாசங்களுக்கு அப்பாற்பட்ட, அனைத்தையும் கடந்த, சித்தி பல பெற்ற முனிவர் அல்லவா? சந்தேகம் எழும் இடங்களில் எல்லாம் சித்ரகுப்தனைத் திரும்பிப் பார்ப்பார். அவரின் குறிப்பை உணர்ந்தவராக, சித்ரகுப்தனே அவருக்கு அனைத்தையும் விளக்குவார். இருவரும் நடந்து வரும் வழியில், ஓர் இடத்தில் ஐந்தடி உயரத்துக்குக் கற்பாறை ஒன்றைக் கண்டார் முனிவர்.
‘இது என்ன… கற்பாறை?’ என்று கேட்ட முனிவரைப் பார்த்து, ‘ஒன்றுமில்லை மகாமுனி, ஒரு சிறுவனின் பாவம். இப்படி வளர்ந்து நிற்கிறது!’ என்றார் சித்ரகுப்தன்.
‘சிறுவன் செய்த பாவமா? அது என்ன பாவம்?’ பூலோகத்தில் ஒரு முனிவரின் ஆசிரமத்துக்குத் தினமும் பல அதிதிகள் வருவது வழக்கம். முனிவரும் வருபவர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்று உபசரித்து உணவு அளிப்பார். அந்த முனிவருக்கு ஒரு பிள்ளை. அந்தப் பிள்ளை மிகவும் சேட்டைக்காரன். எப்போதும் ஏதாவது குறும்புகள் செய்துகொண்டே இருப்பான். அதிதியாக வருபவர்களுக்கு முனிவர் பரிமாறும் உணவில் சிறு சிறு கற்களைப் போட்டு, அவர்கள் சாப்பிடும் போது படும் கஷ்டத்தை ரசித்துப் பார்ப்பான். அப்படி அவன் அதிதிகளுக்கு செய்த பாவமான அந்தக் கற்கள் தான் சிறுவன் வளர வளர சிறு பாறையாக இப்படி வளர்ந்து நிற்கிறது. விதி முடியும் நேரத்தில் அவன் யமலோகத்துக்கு வரும்போது இந்தப் பாறையை அவன் உண்ண வேண்டும். இதுதான் அவனுக்கான தண்டனை” என்றார் சித்ரகுப்தன். அசந்து போனார் முனிவர். இருவரும் நடந்தார்கள்.
முனிவருக்கு அந்தச் சிறுவன் யார் என அறிந்துக் கொள்ள ஆர்வம். இது எங்கோ நடந்ததை தான் அறிந்ததாக அவருக்குள் ஒரு நினைவு நிழலாட்டம். ஆனால், சித்ரகுப்தனிடம் கேட்கத் தயக்கம். அவர் வேறுபுறம் சென்றதும், ரிஷி தன் ஞான திருஷ்டியில் அந்தச் சிறுவன் யார் எனப் பார்த்தார். அது வேறு யாரும் அல்ல… சாட்சாத் அவரே தான். தன் தவறை உணர்ந்தார்.
எமதர்மனிடம் போனார். நடந்ததைச் சொன்னார். எமதர்மா…! நான் முக்தி பெற்று இறைவனடி சேர விரும்புகிறேன். அதற்குத் தடையாக நிச்சயம் இந்தக் கல் இருக்கும். எனவே, இந்த ஜன்மத்திலேயே அந்தப் பாவத்தைப் போக்க விரும்புகிறேன். நானே கொஞ்சம் கொஞ்சமாக இந்தக் கல்லை தின்று செரித்துவிடுகிறேனே…’முனிவரின் கோரிக்கையை எமதர்மன் ஏற்றான்.
கல்லைச் சிறிது சிறிதாக அரைத்து உண்டார் முனிவர். ‘சிலா என்றால் கல் என்று பொருள். கல்லை உண்டவர் என்பதால் அந்த முனிவர் `சிலாதர்’ ஆனார்.
எத்தனை சக்தி பெற்றவராக இருப்பினும், எண்ணற்ற தவம், ஞானம் பெற்றவராக இருந்தாலும், ஒருவர் பிறருக்கு செய்யும் தீமை அவரைச் சும்மா விடாது. பெரும் கர்ம வினையாக வளர்ந்து கொண்டே போகும். ஒரு நாள் மொத்தமாகத் திரும்பக் கிடைக்கும். அப்போது நாம் அந்தக் கர்ம வினையை அனுபவித்தேத் தீர்க்க வேண்டும். இதை உணர்ந்தவர்கள் எறும்புக்குக்கூட இன்னல் விளைவிக்க நினைக்க மாட்டார்கள்.