ஒரு வயதான பெண்மணி விமான நிலையத்தில் விமானத்துக்காகக் காத்துக் கொண்டிருந்தார்.
விமானம் வரத் தாமதமாகும் என்ற அறிவிப்பைக் கேட்டவுடன் கடைக்குச் சென்று படிக்கப் புத்தகமும் சாப்பிட ஒரு பிஸ்கட் பாக்கெட்டும் வாங்கினார்.
ஒரு சேரில் அமர்ந்து, தான் வாங்கி வந்த புத்தகத்தைப் பிரித்துப் படிக்க ஆரம்பித்தார். அவருக்கு ஒரு சேர் தள்ளி ஒரு வாட்டசாட்டமான நபர் உட்கார்ந்திருந்தார்.
சிறிது நேரத்தில் அந்த நபர் பிஸ்கட் பாக்கெட்டைப் பிரித்து ஒரு பிஸ்கெட் சாப்பிட்டுவிட்டு, இடையில் காலியாக இருந்த சேரின் மீது வைத்தார்.
அந்தப் பெண்மணி அவரைப் பார்த்து முறைத்து விட்டு ஒரு பிஸ்கட் எடுத்துச் சாப்பிட்டார்.
அந்த நபர் மறுபடியும் ஒரு பிஸ்கெட் எடுத்துச் சாப்பிட்டார்.
அந்த பெண்மணிக்குக் கோபம் வந்தது, இருந்தாலும் அந்த நபரின் உருவத்தைப் பார்த்துவிட்டு எதுவும் சொல்லாமல் இவரும் ஒரு பிஸ்கட் எடுத்துச் சாப்பிட்டார்.
அந்த முரட்டு மனிதன் மறுபடியும் ஒரு பிஸ்கட் எடுத்து சாப்பிட்டார்.
...ச்சே பிஸ்கட் திருடித் தின்கிறானே... இவனுக்குக் கொஞ்சம் கூட வெட்கம் இல்லையா? என்று நினைத்துக் கொண்டே அந்தப் பெண்மணி தானும் ஒரு பிஸ்கட் எடுத்துச் சாப்பிட்டார்.
இப்படியே இருவரும் மாறிமாறிப் பிஸ்கட் சாப்பிட்டுக் கொண்டு இருந்தனர்.
கடைசியாக ஒரே ஒரு பிஸ்கட் இருந்தது. இருவரும் அந்தப் பிஸ்கட்டைப் பார்த்தனர்.
சிறிது நேரம் அமைதியாக இருந்தனர்.
அந்த முரட்டு மனிதன் அந்தப் பிஸ்கட்டை இரண்டாக உடைத்துப் பாதியை அவர் சாப்பிட்டுவிட்டு மீதியை அந்தச் சேரில் வைத்தார்.
அந்தப் பெண்மணி மீதி பாதி பிஸ்கட்டைச் சாப்பிட்டு விட்டு விமானம் ஏறக் கிளம்பி விட்டார்.
விமானத்தில் ஏறி அமர்ந்தவுடன், என்ன மோசமான மனிதன்? பிஸ்கெட் வேண்டும் என்றால் கேட்டு வாங்கி சாப்பிட வேண்டியது தானே... இப்படியாத் திருடித் தின்பது என்று சொல்லிக் கொண்டேத் தண்ணீர் குடிப்பதற்குப் பையில் கையை விட்டார்.
அந்தப் பெண்ணுக்கு ஒரே ஆச்சரியம், கடையில் வாங்கிய பிஸ்கட் பாக்கெட் அவர் பையில் இருந்தது.
அப்படியென்றால், நான் இவ்வளவு நேரம் அங்கு சாப்பிட்ட பிஸ்கட் அந்த முரட்டு மனிதனுடையதுதானா…? நான்தான் பிஸ்கெட் திருடிச் சாப்பிட்டேனா…? என்று சொல்லிக்கொண்டே தன் செயலுக்காக வருந்தினார்.
எப்பொழுதும் ஒருவருடைய உருவத்தை வைத்து, அவர் குணத்தை நாம் அறிய முடியாது. அடுத்தவர்கள் மேல் குறை காணும் முன் நாம் தகுதியானவரா என்று நினைக்க வேண்டும்.