தெருவொன்றில், ஒரு பெண் கீரை விற்றுக் கொண்டு சென்றாள் .
வீட்டுவாசலில் மகனோடு அமர்ந்திருந்த தாய், கீரை வாங்க அவளைக் கூப்பிட்டு, "ஒரு கட்டு கீரை என்ன விலை...?" என்று கேட்டாள்.
"ஐந்து ரூபாய்" என்றாள் கீரைக்காரி.
“ஐந்து ரூபாயா...? மூன்று ரூபாய்தான் தருவேன்... மூன்று ரூபாய் என்று சொல்லி நாலு கட்டு கொடுத்திட்டுப் போ" என்றாள் அந்தப் பெண்மணி.
"இல்லம்மா... அந்த விலைக்கு வராதும்மா" என்றாள் கீரைக்காரப் பெண்.
“அதெல்லாம் முடியாது. மூன்று ரூபாய்தான்...” பேரம் பேசினாள் அந்தத் தாய்.
பேரத்திற்கு ஒத்துக்கொள்ளாத அந்தப் பெண் கூடையை எடுத்துக் கொண்டு சிறிது தூரம் சென்றுவிட்டு, "மேல ஒரு ரூபாய் போட்டுக் கொடுங்கம்மா" என்றாள்.
“முடியவே முடியாது. கட்டுக்கு மூன்று ரூபாய்தான். தருவேன்..." என்று பிடிவாதம் பிடித்தாள்.
கீரைக்காரி சிறிது யோசனைக்கு பிறகு, "சரிம்மா உன் விருப்பம்" என்று கூறிவிட்டு நாலு கட்டுக் கீரையை கொடுத்துவிட்டு, பன்னிரண்டு ரூபாயை வாங்கிக் கொண்டு கூடையைத் தூக்கி தலையில் வைக்கப் போகும் போது கீழே சரிந்தாள்.
"என்னடியம்மா, காலையில் ஏதும் சாப்பிடலயா...?" என்று அந்த தாய் கேட்க,
"இல்லம்மா போய்தான் கஞ்சி காய்ச்சணும்" என்றாள் கீரைக்காரி.
"சரி. இரு... இதோ வர்றேன்..." என்று கூறிவிட்டு வீட்டுக்குள் சென்றவள், திரும்பும்போது, ஒரு தட்டில் ஐந்து இட்லியும், சட்னியோடு வந்தாள்.
பின்னர் அவள் "இந்தா, இந்த இட்லியைச் சாப்பிட்டு விட்டுப் போ" என்று கீரைக்காரியிடம் கொடுத்தாள்.
எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்த அந்த தாயினுடைய மகன், "ஏம்மா ஐந்து ரூபாய்க்குப் பேரம் பேசுனிங்க.. ஒரு இட்லி ஐந்து ரூபாய் ன்னு வச்சுகிட்டாக்கூட ஆறு இட்லிக்கு முப்பது ரூபாய் வருதும்மா...?” என்றான்.
அதற்கு அந்தத் தாய், "வியாபாரத்துல தர்மம் பார்க்கக் கூடாது, தர்மத்துல வியாபாரம் பார்க்கக் கூடாதுப்பா" என்று கூறினாள்.