போகும் வழியில் ஒரு மின்கம்பத்தில் ஒரு சிறு துண்டு காகிதம் எழுதித் தொங்க விடப்பட்டிருந்தது.
தற்செயலாக அதைக் கவனித்த அவன், அதில் அப்படி என்னதான் அதில் எழுதியிருக்கிறது என்ற ஆர்வத்தில் போய் படித்தான்.
அதில், “என்னுடைய ஐம்பது ரூபாய் தொலைந்து விட்டது. யார் கையிலாவது கிடைத்தால், தயவு செய்து இந்த முகவரியில் தருமாறு கேட்டுக் கொள்கிறேன். எனக்குக் கண் பார்வை அவ்வளவு சரியில்லை” என்று ஒரு பெண்மணியின் பெயரும், வீட்டு முகவரியும் கொடுக்கப்பட்டிருந்தது.
அவனுக்கும் பொழுது போகவில்லை, அந்தக் குறுக்கு வழியில் பார்த்த ஒரு நபரிடம் முகவரியைச் சொல்லி வழி கேட்டான்.
“அந்த அம்மாவா, கொஞ்சம் தூரம் போனால் ஓர் பழைய வீடு இருக்கும். அங்கேதான் அந்தக் கண் தெரியாத அம்மா இருக்கு” என்று சொன்னார்.
அங்கே ஓர் சிறிய கீத்து கொட்டகை. ஒரு நாள் மழைக்குக் கூட தாங்காது. வெளியில், கண்கள் குழி விழுந்து, எலும்பும் தோலுமாக வயதான ஓர் அம்மா அமர்ந்திருந்தார்.
அவன் காலடிச் சத்தம் கேட்டதும், “யாருப்பா நீ?” என்றாள்.
“அம்மா நான் இந்த வழியாக வந்தேன், எனக்குக் கீழே ஐம்பது ரூபாய் விழுந்து கிடைத்தது. அதை உங்களிடம் தரலாமென்றுதான் வந்தேன்” என்றான் அவன்.
அதைக் கேட்டதும் அந்த அம்மா அழ ஆரம்பித்து விட்டார்.
பின்னர், “தம்பி, ரெண்டு நாளா இதுவரை முப்பது பேருக்கு மேலே வந்து ஐம்பது ரூபாய் கீழே விழுந்து கிடைத்தது என்று சொல்லிக் குடுத்துட்டு போறாங்க... அந்தக் கடிதம் நான் எழுதலை, எனக்கு எழுதப் படிக்கத் தெரியாது” என்றாள் அவள்.
“பரவாயில்ல, அம்மா, நீங்க இந்தப் பணத்தை வச்சிக்கோங்க” என்று சொல்லிக் கொடுத்து விட்டுத் திரும்பினான்.
அப்போது அந்தப் பெண், “தம்பி, நீ போகும் போது, அந்த மின்கம்பத்தில் இருக்கும் அந்தக் கடிதத்தை மறக்காமல் கிழித்துப் போட்டு விடு” என்று சொன்னாள்.
அவன் மனதில் வித விதமான எண்ணங்கள். யார் அந்தக் கடிதத்தை எழுதி இருப்பார்? அந்த கடிதத்தைக் கிழித்து விடு, என்று அந்த அம்மா ஒவொருவரிடமும் கூறிக் கொண்டுதான் இருப்பார். ஆனால் யாரும் அப்படிச் செய்யவில்லை. யாரும் இல்லாமல் அனாதையாக வாழும் ஓர் உயிருக்கு கடித வடிவில் உதவி செய்த அந்த நண்பருக்கு மனதால் நன்றி சொல்லி கொண்ட அவன், நன்மை செய்யவேண்டும் என்ற மனம் இருந்தால் அதற்கு ஆயிரம் வழி என்று நினைத்தபடி சென்றான்.
இடையில் வழியில் ஒருவர் அவனிடம், “அண்ணே, இந்த முகவரி எங்கேயிருக்கிறது என்று சொல்ல முடியுமா? கீழே இந்த ஐம்பது ரூபாய் கிடைத்தது. அந்த அம்மா கிட்டேக் கொடுக்கணும். வழி சொல்லுங்களேன்... என்றார்.
அவனது கண்கள் பனித்தன. மனித நேயம் இன்னும் சாகவில்லை..