ஒரு விவசாயி,அதிக வருமானம் கிடையாது. மனதுக்குள்ளேயே சிவனை வழிபடுவான்.
ஒருநாள் காட்டு வழியாக சென்று கொண்டிருந்தான்.அப்போது இடி,மின்னலோடு மழை பெய்தது.ஒரு மண்டபத்துக்குள் ஒதுங்கினான்.
உள்ளே போனவன்,அது ஒரு பாழடைந்த சிவன் கோயில் என்பதை உணர்ந்தான். இடிந்த நிலையில் புதரும் செடியுமாக கோயில் இருந்த காட்சியைப் பார்த்து வருந்தினான். நமக்கு வசதி இருந்தால் கோயிலைப் புதுப்பிக்கலாமே என நினைத்தான். கண்களை மூடினான். மனதில் கற்பனையாலேயே கோயிலை சீர்செய்தான்.
அந்தக் கோயிலின் ராஜகோபுரம், பிராகாரங்கள், மண்டபங்கள், மூல சந்நிதிகள் எல்லாம் அமைத்து விமர்சையாக கும்பாபிஷேகம் செய்து சிவனை வழிபடுவது போல் மனதினுளேயே எல்லாம் முடித்து விட்டான். கருநாகம் சீறிக்கொண்டு வரும் சத்தத்தைக் கேட்டவுடன், அந்த இடத்தைவிட்டு வெளியே ஓடினான்.
அவன் வெளியேறும் வரை காத்திருந்தது போல தடதடவென மண்டபம் இடிந்து விழுந்தது.அந்த நேரத்திற்கு மழையும் விட்டிருந்தது. தான் உயிர் பிழைத்த கதையை ஊராரிடம் சொன்னான்.
கேட்டுக் கொண்டிருந்த ஒரு சித்தர், அப்பனே இன்று சிவராத்திரி. நீ இன்று மரணத்தை தழுவ வேண்டியவன். ஆனால் மானசீகமாக சிவனுக்கு கோயில் கட்டி வழிபட்டதால் பாவங்கள் நீங்கப் பெற்றாய். அந்தக் கண்டத்திலிருந்து உன்னை காக்கவே யாம் பாம்பாக வந்தோம்" என்றபடியே மறைந்தார்.
அப்போது தான் வந்தது சிவனென அறிந்தனர்.
ஊரே விவசாயின் பக்தியை கண்டு வணங்கியது.