ஒருநாள் எருமைக்குத் திடீரென்று கோபம் வந்தது.
தன் கோபத்தைத் தீர்த்துக் கொள்ள அது நேரடியாகப் போய் நின்ற இடம் கைலாயம்.
அங்கிருந்த சிவன், “எருமையே! இங்கு கோபத்துடன் வந்திருக்கிறாயே ஏன்?” என்று கேட்டார்.
“எம்பெருமானே! எங்களை ஏன் இப்படிப் படைத்தீர்கள். பூலோகத்தில் மானுடர்கள் எங்களைச் சுத்தமாக மதிப்பதே இல்லை. நாளும் அவர்களது பொல்லாச் சொற்களில் மாட்டிக் கொண்டு அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறோம் நாங்கள். சேற்றில் புரளும் எருமைகளே! மந்தப் புத்தி எருமைகளே! எருமை மாட்டில் மழை பெய்தாற் போல, எருமை போல அசையா ஜென்மமே, சூடு, சொரணை இல்லாத எருமைகளே! என்று எப்படியெல்லாம் மானுடர்கள் எங்களைத் திட்டித் தீர்க்கிறார்கள் தெரியுமா? அதை நினைத்தால் கோபத்திலும், ஆத்திரத்திலும் மனம் புழுங்கிச் சாகிறது. நாங்கள் அப்படியென்ன பாவம் செய்தோம்? இப்படிக் கெட்ட பெயர் வாங்க...!” என்று புலம்பித் தள்ளியது.
சிவபெருமான் தமக்குள் புன்னகைத்துக் கொண்டே, எருமையை நோக்கி, “என்னைக் கூட சுடுகாட்டில் ஆடுபவன், பிணம் எரித்த சாம்பல் பூசித் திரிபவன், கபால ஓட்டில் பிச்சையெடுப்பவன் என்று மானுடர்களில் பலர் சொல்லிக் கொண்டுதானிருக்கின்றனர்” என்றார்.
எருமை, “ஐயனே... உங்கள் அருமை அறியாதவர்கள் கிடக்கிறார்கள், அவர்களை விடுங்கள்... எங்களுக்கு ஆறாத மற்றொரு ரணம் உண்டு. பசுக்களுக்கும், எங்களுக்கும் என்ன பெரிய வித்யாசம்? அவை தரும் பாலும் வெண்மையாகத்தான் இருக்கிறது. நாங்கள் தரும் பாலும் வெண்மையாகத்தான் இருக்கிறது. ஆனால், இந்த மட மானுடர்கள் அவைகளை மட்டும் புனிதம் என்ற பெயரில் போற்றிப் புகழ்கிறார்கள். பசுவின் கோமியத்தைப் பிடித்து வீட்டின் மூலை, முடுக்கெல்லாம் தெளித்து பரிமள வாசம் என்று மெச்சிக் கொள்கிறார்கள். ஆனால், எங்களை வீட்டுக்குள் நுழையவே விடுவதில்லை. எப்போது பார்த்தாலும் மந்தப் புத்தி எருமை, அதுஇதுவென்று எங்களைக் கரித்துக் கொட்டுகிறார்கள். இதிலிருந்து நாங்கள் விடுபட என்ன செய்ய வேண்டும். நாங்களும் பசுக்களுக்கு இணையாக மதிக்கப்பட வேண்டும். பரம்பொருளான உங்களால்தான் அது முடியும், அதனால் இங்கு தங்களைத் தேடி வந்தேன்” என்றது.
அதனைக் கேட்ட சிவபெருமான், “எருமையே, பிரம்மன் படைப்பில் அனைத்து உயிர்களும் சமமானவையே. ஒன்றில் உயர்வும், பிறிதொன்றில் தாழ்வும் எப்போதும் இல்லை. உன் கோரிக்கை நியாயமானதுதான். எனவே, அதை நிறைவேற்ற நான் முயற்சிக்கிறேன். அதற்கு முன்பு நீ எனக்கொரு உறுதிமொழி அளிக்க வேண்டும். அப்போதுதான் உன்னைப் பசுக்களுக்கு இணையாக மானுடர் மதிக்கும்படிச் செய்யமுடியும்” என்றார்.
எருமைக்கு மிகவும் மகிழ்ச்சியடைந்தது. உடனே அந்த எருமை, “ஐயனே, நான் என்ன செய்ய வேண்டும், சொல்லுங்கள்” என்றது.
உடனே சிவபெருமான், “பூலோகத்தில் பசுக்களுக்கு இணையாக மதிக்கப்பட வேண்டும் என்ற உனது விருப்பத்தை நான் நிறைவேற்ற, நீ இன்று முதல் சேற்றில் புரளும் உன் இன்பத்தைக் விட்டுவிட வேண்டும். சொந்த ஆசையிலோ அல்லது சூழ்நிலை காரணமாகவோக் கூட நீ இனி எப்போதும் சேற்றில் அமிழ்ந்து புரளக்கூடாது. இந்த உறுதிமொழியை அளித்தால், நாளை முதல் பூலோகத்தில் எருமைகளும், பசுக்களும் ஒரே விதத்தில் மதிக்கப்பட வேண்டும் என்று நான் வரமளித்து விடுவேன்' என்றார்.
சிவபெருமானின் கருணையில் முகம் பூரித்தாலும், எருமைக்கு அவர் கேட்ட உறுதி மொழியை ஏற்றுக் கொள்ள விருப்பமில்லை.
சிறிது நேரம் பொறுமையாக இருந்த எருமை, சிவபெருமானிடம், “சர்வேஸ்வரா, நீங்கள் கேட்கும் உறுதிமொழியை என்னால் தர இயலாது. மானுடர்களின் மதிப்பு, மரியாதைக்காக என்னால் எனது சிற்றின்பத்தைப் பலி கொடுக்க முடியாது. சேற்றில் புரள்வது எங்கள் இனத்திற்குக் கிடைத்த இன்பங்களில் ஒன்று. அதை விட்டுவிட்டுப் பசுக்களுக்கு இணையாக மதிக்கப்பட்டு நாங்கள் பெறப்போவது ஏதுமில்லை. என் கோபத்தின் மீதே எனக்க் இப்போது கோபம் வருகிறது. உங்கள் ஆசியே போதும்... எனக்கு வரம் ஏதும் வேண்டாம்' என்று சொல்லித் திரும்பிப் போனது.
நடந்தது அத்தனையையும் கவனித்துக் கொண்டிருந்த நந்திதேவரும், பூத கணங்களும் எம்பெருமானின் அருகில் வந்து, “மகாதேவரே! எருமையின் கோரிக்கையில் தவறென்ன?” என்றார்கள்.
சிவபெருமான், “எருமையின் கோரிக்கையில் தவறில்லை நந்தி... அந்தக் கோரிக்கையை அடைவதற்கான முயற்சியில்தான் தடை. சேற்றில் புரள்வது தான் தனக்கு இன்பம் என எருமை முடிவெடுத்து விட்டது. அப்படி இருக்கையில் மானுடர்கள் அதைக் குளிப்பாட்டி பூஜித்து நடு வீட்டில் கொண்டு வைக்க நினைத்தாலும், அதன் நினைவெல்லாம் சேற்றைத் தேடிக் கண்டடைவதாகத் தான் இருக்கும். நினைவில் எப்போதும் சேற்றைத் தேடும் எருமையை மானுடர் எப்படி பூஜிப்பர்? எருமை சேற்றைக் கைவிட முடியாததோடு தமக்கு நிஜமான இன்பம் மானுடர்களின் மரியாதையில் இல்லை என்பதையும் கண்டு கொண்டது. இது தன்னையறிந்த நிலை. இந்த நிலையை மனிதர்கள் அடைவார்களாயின் அவர்களுக்குள் போட்டி பொறாமை என்பதே இல்லாமல் நீங்கி விடும். இதுதான் வாழ்வின் ரகசியம். ஒவ்வொரு மனிதனும் தன்னைத் தானறிந்து செயல்பட்டால் அதற்குண்டான வெற்றிக்கும், தோல்விக்கும் தானன்றி வேறெவரும் காரணமில்லை என்பதையும் உணர்வார்கள். அதோடு வாழ்வில் எதையாவது சாதிக்க வேண்டுமெனில் எதையாவது தியாகம் செய்தே தீர வேண்டும் என்பது எழுதப்படாத விதி. அந்த தியாகத்தைச் செய்து வாழ்வின் அடுத்த படிக்கு முன்னேற எருமைக்கு மனமில்லை. அதனால் அது தனது வழக்கமான நிலையிலேயே நீடிக்கிறது” என்று சொன்னார்.