குமரிவேந்தன் என்னும் அரசனிடம், மாதவன் என்னும் இளைஞன் வேலை செய்து வந்தான். அந்த அரசனுக்குப் பறவைகள் பேசுவது நன்றாகத் தெரியும்.
அதை அறிந்த மாதவன், நம் அரசருக்கு மட்டும் எப்படி பறவைகள் பேசுவது தெரிகிறது என்று வியப்படைந்தான்.
அரசனுக்குத் தினமும் மாதவன்தான் சாப்பாடு பரிமாறுவான். அரசனின் உணவில் ஒரு பகுதி மட்டும் தனியாகத் தனிப் பெட்டியில் ராணியே சமைத்துத் தருவாள்.
ஒருநாள் மாதவன் அந்தப் பெட்டியைத் திறந்து பார்த்தான். அந்தப் பெட்டிக்குள் ஏதோத் துண்டு துண்டுகளாகச் சமைத்து வைக்கப்பட்டிருந்தன. இது என்னவாக இருக்கும்? என்று ஒரு துண்டை எடுத்துச் சாப்பிட்டு பார்த்தான். அதைச் சாப்பிட்ட பின் மாதவனுக்குப் பறவைகள் பேசுவது புரிய ஆரம்பித்தது.
அதன்பின் மாதவன் அரண்மனையில் இருந்து குதிரையில் கிளம்பிச் சென்றான். போகும் வழியில் எறும்புகள் சாரை சாரையாக செல்வதைப் பார்த்தான்.
அப்பொழுது எறும்பின் தலைவன் மாதவனைப் பார்த்து, குதிரையை எங்களை மிதிக்காதவாறு ஓட்டிச் செல்லுங்கள் என்றது. மாதவனும் அவ்வாறே ஓட்டிச் சென்றான். அடுத்து, போகும் வழியில் குளம் ஒன்று தென்பட்டது. அக்குளத்தின் அருகில் மீன்கள் அழும் குரல் கேட்டது. உடனே மாதவன் இறங்கிச்சென்று என்னவென்று பார்த்தான். மீன்கள் அவனிடம், நாங்கள் குளத்தில் தாவிக் குதித்து விளையாடும்போது தவறுதலாக இங்கே விழுந்து விட்டோம். எங்களைக் காப்பாற்றுங்கள் என்றது. மாதவனும் மீன்களைக் குளத்தில் விட்டுவிட்டுச் சென்றான். மீன்கள் மாதவனுக்கு நன்றி தெரிவித்தன.
அதன்பிறகு, சிறிது தூரம் சென்றபின் ஒரு கூண்டில் தாய்க் காகம் தன் குஞ்சுகளிடம், இனி நீங்களே உணவைத் தேடிக் கொள்ளுங்கள் என்று கூறி சேகரித்து வைத்திருந்த தானியங்களைக் கீழே தள்ளியது. உடனே மாதவன் அந்தத் தானியங்களை எடுத்துக் காக்கை குஞ்சுகளுக்குக் கொடுத்தான். காக்கை குஞ்சுகள் மாதவனுக்கு நன்றி தெரிவித்தன.
அதன்பின் அவன் வேறு நாட்டிற்கு சென்றான். அந்நாட்டில் இளவரசிக்கு சுயம்வரம் நடந்து கொண்டிருந்தது. மாதவனும் அப்போட்டியில் கலந்து கொண்டான்.
முதலில் அவனை ஒரு குளத்திற்கு அழைத்து சென்று, குளத்திற்குள் ஒரு மோதிரத்தைப் போட்டு அதனை எடுக்க வேண்டும் என கட்டளையிட்டார்கள்.
அவன் குளத்திற்குள் எவ்வாறு மோதிரத்தைத் தேடுவது என்று நீந்த ஆரம்பித்தவுடன் அவனுக்கு ஆச்சரியம்! இதோ உங்கள் மோதிரம் என்று ஒரு குரல் கேட்டது. ஒரு மீன் தன் வாயில் மோதிரத்தைக் கவ்விக்கொண்டு வந்து அப்போட்டியில் இருந்து அவனைக் காப்பாற்றியது.
அடுத்தப் போட்டியாக, ஒரு மூட்டை அரிசி முழுவதும் தோட்டத்தில் கொட்டப்பட்டு விடிவதற்குள் ஒரு அரிசி விடாமல் சேகரிக்க வேண்டும் என்பதுதான். ஆகா, இது நடக்கவே நடக்காது என்று முடிவு செய்து அவன் தூங்கி விட்டான். அவன் உதவி செய்த எறும்புகள், அரிசியை ஒவ்வொன்றாகச் சேகரித்து ஒரு மூட்டையில் வைத்திருந்தது. அதனால் அதிலும் ஜெயித்து விட்டான்.
இறுதிப் போட்டியாக, ஒரு தங்க ஆப்பிள் காய்க்கும் மரம் காட்டில் இருக்கிறது. அதைக் கண்டுபிடித்து ஆப்பிளை எடுத்து வர வேண்டும் என்பதுதான். அவன் இருட்டும் வரை தேடினான். தங்க மரத்தைக் காணவே இல்லை. கவலையுடன் தூங்கிவிட்டான். காலையில் எழுந்து பார்க்கிறான். அவன் அருகில் தங்க ஆப்பிள் இருந்தது. அவனிடம் உதவி பெற்ற காகங்கள் அந்த ஆப்பிளைத் தேடிக் கொண்டு வந்து அவனிடம் போட்டிருந்தன.
எல்லாப் போட்டியிலும் வெற்றி பெற்றதால் அவனை இளவரசி மணந்து கொண்டாள். அதன் பிறகு, அவன் அந்நாட்டின் அரசனாகி அவளுடன் அந்த நாட்டை மகிழ்ச்சியுடன் ஆட்சி செய்தான்.