ஒரு ஆசிரியை பாடவேளையின் இறுதியில் மாணவிகளை உற்சாகமூட்டுவதற்காக ஒரு சிறிய தேர்வு ஒன்றை வைத்தார்.
அதில் வெற்றி பெறும் மாணவிக்கு புதியதொரு செருப்பு வழங்கப்படும் என்றார்.
அனைத்து மாணவிகளும் மிகுந்த மகிழ்ச்சியுடன் அந்தத் தேர்வை எழுதினர்.
இறுதியில் அவர்களது விடைகளைப் பரிசீலித்துப் பார்த்த ஆசிரியை, மாணவிகள் எழுதியிருந்த அனைவரது விடைகளும் சரியாக இருந்தது கண்டு மகிழ்ச்சியடைந்தார். இருப்பினும், தான் அறிவித்திருந்த பரிசை யாருக்குக் கொடுப்பது? என்று அவருக்குத் தெரியவில்லை.
சிறிது நேரம் சிந்தித்து விட்டு, குலுக்கல் முறையில் இப்பரிசு கொடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
ஒவ்வொருவரும் ஒரு துண்டு தாளில் அவரவர் பெயரை எழுதி ஒரு பெட்டியில் போடுமாறு கூறினார்.
அனைவரும் அதைப்போல் செய்தனர்.
ஆசிரியை அப்பெட்டியைக் குலுக்கி அதில் ஒரு சீட்டை எடுத்தார். அதில், “தமிழ்ச்செல்வி” என்ற மாணவியின் பெயர் இருந்ததால், அம்மாணவிக்கு அப்பரிசை வழங்கினார்.
அவ்வகுப்பில் மிகவும் ஏழ்மையான மாணவிக்கு, அந்தப் பரிசு கிடைத்தது அவருக்கும் மகிழ்ச்சியாகவே இருந்தது.
பல காலமாக, மிகவும் தேய்ந்து போயிருந்த காலணிகளை அணிந்து வந்த அம்மாணவிக்கும் எல்லையில்லா மகிழ்ச்சிதான்.
பின்னர் அவ்வாசிரியை மகிழ்ச்சியுடன் பள்ளியில் நடந்த சம்பவத்தைக் கணவரிடம் சொன்னார்.
கணவனும் அதைக் கேட்டு, “ஏழை மாணவிக்குப் பரிசு கிடைத்தது நல்லதுதானே...” என்றார்.
"நல்லதுதான். நீங்கள் நினைப்பது போலவே, என் வகுப்பு மாணவிகள் அனைவருமே... ஏழை மாணவிக்குப் பரிசு கிடைக்க வேண்டுமென்றுதான் நினைத்திருக்கிறார்கள். அந்தப் பெட்டியிலிருந்த அனைத்துத் துண்டுக் காகிதங்களிலும், தங்களது பெயர்களை எழுதாமல் வகுப்பில் ஏழை மாணவியாகிய "தமிழ்ச்செல்வி" பெயரையே எழுதியிருக்கின்றனர்" என்று பதிலளித்தார்.